மேகதாது அணைக்காக மேட்ச் பிக்சிங் செய்யும் பாஜக, காங்கிரஸ்.. போட்டு தாக்கும் தம்பிதுரை
சென்னை:மேகதாது விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மேட்ச் பிக்சிங் செய்து ஆடுவதாக அதிமுக எம்பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி புதன்கிழமை அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்ட 24 அதிமுக எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப் பட்டனர். அதே போல வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட 7 அஇதிமுக எம்பிக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதியை வழங்கக் கோரி அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியின் 13 எம்பிக்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா புட்டா ஆகியோரை இடைநீக்கம் செய்து சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதன் மூலம் 2 நாள்களில் மொத்தம் 45 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பேட்டியளித்த தம்பிதுரை
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு லோக்சபா துணை சபாநாயகரும், அஇதிமுக எம்பியுமான தம்பிதுரை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மேட்ச் பிக்சிங் செய்கிறது. எங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் காவிரி நீர் பிரச்னை மிக முக்கியமாக ஒன்று.
துரோகம் செய்த மத்திய அரசு
தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது. காவிரியில் நீதிமன்றம் எந்த ஒரு அணையும் கட்டக்கூடாது என்று தெளிவான தீர்ப்பு தந்த போதிலும் மத்திய அரசு நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. ரஃபேல் விவகாரத்தில் ஊழல் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தீர்மானத்தை ஏற்படுத்தி விவாதித்து வந்தார்.
ஊழல் புகாரில் காங். பாஜக
அதற்கு நாங்கள் இடையூறாக இருப்பதாக கருதி எங்களை வெளியே அனுப்புகின்றனர். ஹெலிகாப்டர் வாங்குவதில் காங்கிரஸ் ஊழல் செய்திருப்பதாக பாஜகவினர், குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்கள் இருவரின் ஊழல்களை தீர்ப்பதற்கு நாடாளுமன்றம் தேவை.
மேகதாது அணை பிரச்னை
நம்முடைய முக்கியமான பிரச்னை காவிரி நீர் பிரச்னை. கடந்த வருடம் குடிக்க தண்ணீர் இல்லை. 3 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தர மறுத்ததால், பெரிய அவலநிலையை தமிழகம் சந்தித்தது. இப்பொழுது, காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு காங்கிரசும், பாஜகவும் வரிந்துகட்டி கொண்டு கர்நாடக அரசுக்கு உதவுகின்றனர்.
மத்திய அரசு வஞ்சிக்கிறது
சுயநலத்துக்காகவும், கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் பாஜகவினரும், காங்கிரசும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தை வஞ்சிக்கின்றன. தமிழக மக்களுக்கு தர வேண்டிய நியாயத்தை வழங்க வேண்டியது அதிமுகவின் கடமை.
ஜனநாயகமற்ற செயல்
அந்தக் கடமையைச் செய்யவிடாமல் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். இது ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு செயல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காகத்தான் நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம் என்று தம்பிதுரை கூறினார்.