அதிரவைக்கும் அரசியல் பூகம்பங்கள்.. அன்று அருணாச்சல பிரதேசம்.. இன்று கர்நாடகா.. நாளை?
சென்னை: இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் ஆட்சியும், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், பஞ்சாப், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும், கர்நாடகாவில் காங் கூட்டணி ஆட்சியும் உள்ளது.
இந்நிலையில் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் மட்டும் அரசியல் பூகம்பங்கள் அவ்வப்போது ஏற்படுவதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த 2016-ல் அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கிய இந்த அரசியல் சுனாமி பீகார், கோவா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், கர்நாடகா என ஒவ்வொரு மாநிலமாக அதிர வைத்து வருகிறது.
குமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள்தான் உயிருடன் இருக்கும்.. பகீர் தகவலை அளித்த எடியூரப்பா
அருணாச்சல பிரதேசத்தில்
அருணாச்சல பிரதேசத்தில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக இருந்த பெமாகண்டு உள்ளிட்ட 43 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பதவி விலகினர். இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய போது அதனை அப்போது பாஜக மறுத்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் பெமாகாண்டு பாஜகவில் ஐக்கியமாகி முதல்வரானார். தற்போதும் பாஜக முதல்வராக அவர் தொடர்கிறார்.
பீகாரில் மெகா கூட்டணி
இதேபோல் பீகாரில் மெகா கூட்டணி அமைத்து நிதிஷூம், லாலுவும் வெற்றிமாலைகள் சூடிய நிலையில், ஒரு சில சொற்பக் காரணங்களுக்காக அங்கு அந்தக் கூட்டணி உடைகிறது. மோடியை கடுமையாக விமர்சித்து வந்த நிதிஷ், ஒரு கட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மோடியை சந்தித்து பேசுகிறார். லாலுவின் மகன் ஊழல் புகாருக்கு உரிய பதில் தரவில்லை எனக் கூறிநிதிஷ் ராஜினாமா செய்தவுடன் அவருக்கு ஓடோடி வந்து ஆதரவு கொடுத்தனர் பாஜக எம்.எல்.ஏ.க்கள். பின்னர் நள்ளிரவு நேரத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி இன்று கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார் நிதிஷ். பாவம் அவரை நம்பிய லாலுவின் ஆர்.ஜே.டி.யும், காங்கிரசும் பீகாரில் அந்தரத்தில் தொங்குகிறது.
முப்தி
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில், முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசில் அங்கம் வகித்தது பாஜக. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக ஜம்முகாஷ்மீரில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பாஜகவுக்கும், மெகபூபா முப்திக்கும் வேல்லென்த் சரியாக அமையாததால் கூட்டணி அரசில் இருந்து வெளியேறியது பாஜக. இதையடுத்து தேசிய மாநாட்டுக்கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க மெகபூபா உரிமை கோரிய நிலையில், ஆளுநர் அலுவலக பேக்ஸ் இயந்திரம் சரியாக இயங்கவில்லை எனக் காரணம் கூறி அங்கு அவசர அவசரமாக ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மேற்கு வங்கம்
அரசியல் சுனாமி இத்தோடு நின்றுவிடவில்லை, அப்படியே மேற்கு வங்கம் நோக்கிச் சென்றது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்கள். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் பாஜகவுக்கு செல்லவுள்ளதாகவும் பேசப்பட்டது. இதனிடையே மம்தா எப்படியோ தனது வல்லமையை கொண்டு அரசியல் சுனாமியை சமாளித்து ஆட்சியில் தொடர்ந்து வருகிறார்.
கர்நாடக அரசியல் நிகழ்வுகள்
இதற்குள் கர்நாடக அரசியலை புரட்டிப்போடும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன..அங்கு 14 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். மற்ற மாநிலங்களில் லேசான அதிர்வலைகளை ஏற்படுத்திய அரசியல் சுனாமி கர்நாடக மாநிலத்தை அடித்து துவம்சம் செய்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் யார் தப்பித்தார்கள், யார் சேதம அடைந்தார்கள் என்பது தெரிந்துவிடும்.
தமிழகத்திலும்
ஜெ.மறைவுக்கு பின்னர் தமிழகத்திலும் இந்த அரசியல் பூகம்பம் ஏற்பட்டது. ஏனோ அது புஸ்வாணமாகிவிட்டது. இதனிடையே புதுச்சேரி, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கெடுபிடியான ஆளுநர்கள் தங்கள் பங்குக்கு அவ்வப்போது அரசியல் வானில் இடி மின்னலாய் ஒலிக்கின்றனர். இதற்கு மிரண்டு அரண்டு போகும் சூழலில் மாநில முதலமைச்சர்கள் இருக்கின்றனர். அரசியல் பூகம்பங்களை எதிர்கொள்ள வேண்டிய மாநிலங்களின் பட்டியலில் இன்னும் எத்தனை மாநிலங்கள் உள்ளனவோ?
மக்களின் கவலை
இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறது என்பது மக்களின் கவலையாக உள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுபோல கட்சிகளை உடைப்பதும், பலமான கட்சிகளை கலைப்பதும் இதுவரை இல்லாத அளவுக்கு நடந்து வருவதாக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருவோர் கவலை தெரிவிக்கின்றனர்.