பலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்!
Recommended Video
சென்னை: பாரதிய ஜனதா கட்சியிடம் மாநில கட்சிகள் தொடர்ந்து சிக்கி சிதைந்து கொண்டிருக்க காரணமே அந்த கட்சித் தலைவர்கள் வகைதொகையில்லாமல் நில அபகரிப்பு. சொத்து குவிப்பு. நிதி மோசடி என கெட்ட ஆட்டம் ஆடியதுதான்.
மத்தியில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதுடன் ஒரே தேசம் ஒரே கட்சி என்கிற கொள்கையை படுதீவிரமாக முன்னெடுக்க தொடங்கிவிட்டது. கடந்த ஆட்சிக் காலத்திலேயே தாம் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் வழக்குகளில் சிக்கிய எம்.எல்.ஏக்கள். எம்.பி.க்களை வளைத்துப் போட தொடங்கியது பாஜக. பாஜகவுக்கு வசதியாக நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஊழல் பேர்வழிகளாக இருப்பது வசதியாகப் போய் விட்டது.
மேற்கு வங்கத்தில் நிதி நிறுவன மோசடியில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் முகுல் ராய் -ல் தொடங்கிய பாஜகவின் ஆட்டம் இன்றுவரை தொடர்கிறது. அதுவும் லோக்சபா பிரசாரத்தின் போதே பிரதமர் மோடி, திரிணாமுல் கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என பகிரங்கமாகவே பேசினார்.
ஆனாலும் தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ளவில்லை. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே திரிணாமுல் காங்கிரஸின் எதிர்காலத்துக்கு ஆழமான சவக்குழியை தயார் செய்துவிட்டது பாஜக. அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என சிக்கியவர்கள் அத்தனை பேரையும் பாஜகவில் இணைத்துக் கொண்டது.
இவர்களால்தானே தேர்தலே ரத்தானது.. மறுபடியும் வேட்பாளர்களா.. தீபலட்சுமி கேட்பதில் என்ன தப்பிருக்கு
திரிணாமுல் எதிர்காலம்?
ஏற்கனவே இடதுசாரிகளாக இருந்த இந்து உயர்ஜாதியினர் லோக்சபா தேர்தலில் பாஜகவினராகவே மாறி 'ஜெய் ஶ்ரீராம்' கோஷங்களை எழுப்பி வாக்குகளை வாரி கொடுத்தனர். இதனால் மேற்கு வங்கத்தில் வரப்போகும் எந்த ஒரு தேர்தலும் பாஜகவுக்குத்தான் சாதகமாக இருக்கப் போகிறது.
கோவாவில் கூண்டோடு ஜம்ப்
உத்தரப்பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ரீட்டா பகுகுணாவை பாஜக தூக்கியது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏற்கனவே கட்டெறும்பாக இருந்த காங்கிரஸ் தற்போது சுள்ளெறும்பாகிப் போனது. அதுவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குடும்ப தொகுதியான அமேதியிலேயே தோல்வியைத் தழுவும் அளவுக்கு காங்கிரஸ் காணாமல் போயிருக்கிறது. அண்மையில் மகாராஷ்டிராவில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை தூக்கியது. கோவாவில் கூண்டோடு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்தது.
ஆந்திர விஜயமல்லையாக்கள்
ஆந்திராவின் விஜய் மல்லையாக்கள் என தெலுங்குதேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பிக்களை பாஜக விமர்சித்த ஈரம் காயகூடவில்லை. அதே ஆந்திரத்து விஜயமல்லையாக்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். பாஜகவில் இணைந்த எம்.பி.க்கள் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை சோதனைகளில் சிக்கியிருந்தவர்கள். வேறுவழியே இல்லாமல் பாஜக பஜனை பாட வேண்டிய கதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
அதிமுக கதி
அதேகதிதான் அதிமுகவுக்கும்... இங்கே எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களை வளைக்காமல் ஒட்டுமொத்தமாக ஒரு கட்சியையே 'ஆட்டைய' போட்டிருக்கிறது பாஜக. அந்த அளவுக்கு அதிமுக அமைச்சர்கள் குடுமி டெல்லி பிடியில் சிக்கியிருக்கிறது. அதிமுக அரசின் ஒட்டுமொத்த ஊழல் முறைகேடு ஜாதகமும் டெல்லியில் குவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாஜக சொல்கிற அத்தனையும் செய்யக் கூடிய எடுப்பார் கைப்பிள்ளையாக அதிமுக இருக்கிறது.
திமுகவுக்கும் நெருக்கடி
எதிர்க்கட்சியான திமுகவும் அதிமுகவுக்கு சளைத்தது அல்ல. தேர்தல் மேடைகளிலும் லோக்சபாவிலும் பாஜகவுக்கு எதிராக சங்கநாதமாக முழங்குகிறது திமுக. ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே அடிக்கிற மாதிரி அடிப்போம்... ஆனால் அடிக்கவே மாட்டோம் என சாசனம் எழுதிக் கொடுத்தது. இப்போது பகிரங்கமாகவே மத்திய அமைச்சரின் வீட்டுக்கு தூது அனுப்புகிறது திமுக. ஏனெனில் திமுகவும் அதிமுகவைப் போலதான்..
திமுக தயக்கம்
பாஜகவின் பிடியில் ஏராளமான திமுக பெருந்தலைகள் சிக்கியிருக்கின்றன. அதனால்தான் பாஜகவிடம் மென்மை போக்கை 'அறிக்கைகள்' மூலம் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது திமுக. மாநில உரிமைகள் அத்தனையையும் பறித்து கொள்ள ஒரே தேசம் எனும் கோஷத்தை எழுப்பும் பாஜகவுக்கு எதிராக கடுமையை வெளிப்படுத்த தயங்குகிறது திமுக என்பது பட்டவர்த்தமான உண்மை. ஒரே தேசம் கோஷத்துக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கவும் திமுக முன்வரவில்லை. ஏனெனில் மடியில் கனமிருக்கிறது.. அதனால் பாஜகவை கண்டு பயமும் இருக்கிறது.. பம்மவும் செய்கிறது.
ஆதாயமடையும் பாஜக
இப்படி அங்கிங்கெனாதபடி கட்சிகள் மோசடிகளிலும் ஊழல்களிலும் சிக்கி புதைசேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. இதை பாஜக லாவகமாக பயன்படுத்தி அரசியல் வேட்டையை அற்புதமாக நடத்தி வருகிறது. ஆனால் இந்த வேட்டையில் தெரிந்தோ தெரியாமலோ, ஊரில் உள்ள அத்தனை ஊழல் பெருச்சாளிகளையும் தனது வலைக்குள் பாஜக சேர்த்து வருகிறது. இது நாளைக்கு அதற்கு எதிராகவே கூட மாற வாய்ப்புண்டு.
பரிதாப பலி ஆடுகள்!