எச். ராஜாவுக்கு மட்டும் பதவி தர.. இது என்ன திமுகவா.. பாஜகவினர் போடும் அதிரடி சரவெடி!
எச்.ராஜாவுக்கு பதவி பறித்தது தொடர்பாக பல யூகங்கள் எழுந்து வருகின்றன
சென்னை: "எச்.ராஜாவுக்கு பதவி தரலேன்னா என்ன? சுயமரியாதையும்,கௌரவமும் வீரமும் இருந்தாலே போதும்... பதவியிலே நீடிக்க இது ஒன்னும் திமுக அல்ல" என்று பாஜகவினர் நெத்தியடி பதிலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறகு, தமிழக பாஜக தலைமைக்கு நீண்ட காலமாக யாரும் நியமனம் செய்யப்படாமல் இருந்த சமயம், பல்வேறு பெயர்கள் மாநில தலைமைக்கு லிஸ்ட்டில் அடிபட்டன... அதில் எச்.ராஜாவும் ஒருவர்.
அப்போது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் மாநில தலைமைக்கான தேர்தலில், தவறாமல் சாய்ஸில் இடம்பெறும் பெயர் எச்.ராஜாதான்.. எச்.ராஜாவை பொறுத்தவரை கட்சியின் மூத்த தலைவர்.. அனுபவசாலி.. திறமைசாலி.. எதுவானாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. யாராக இருந்தாலும் நேருக்கு நேராக கேள்வி எழுப்புபவர்!
புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா? கொங்கு ஈஸ்வரன் கேள்வி
நெருக்கம்
டெல்லி வரை அப்போதிருந்து இப்போது வரை செல்வாக்கு உள்ளவர்.. தலைவர்களிடம் நெருக்கமும், பாசமும் காட்டி வருபவர்.. அதனால்தான் மாநில தலைமை பதவிக்கு இவரது பெயர் பரிசீலனையில் நிச்சயம் பெற்றே தீரும். ஆனால், பட்டியலினத்தை சேர்ந்த முருகனை தலைவராக நியமனம் செய்துவிட்டனர். எனினும், இந்த நியமன அறிவிப்பு வந்தவுடனேயே எச்.ராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதேபோல, எல்.முருகனும், மூத்த தலைவர் எச்.ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வாழ்த்து வாங்கினார்.
தமிழகம்
2 நாளைக்கு முன்பு, பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். இதிலும் எச்.ராஜா பெயர் இடம்பெறவில்லை.. அவர் மட்டுமில்லை..தமிழகத்தை சேர்ந்த யார் பெயரும் அதில் இடம்பெறவில்லை. இருந்தாலும் எச்.ராஜா இதற்கும் வாழ்த்து சொல்லி இருந்தார்.. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்கும் தேசிய நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்" என்று மனசார பதிவிட்டார்.
எச்.ராஜா
12 தேசிய துணைத் தலைவர்கள், 8 தேசிய பொதுச் செயலாளர்கள் என மொத்தம் 70 பேர் தேசிய நிர்வாகிகளாக நியமனம் நடந்தும், அதில் எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்கள் ஏன் இல்லை? தேசிய செயலாளர் பொறுப்பிலிருந்து எச். ராஜா ஏன் விடுவிக்கப்பட்டார்? செய்தி தொடர்பாளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக தமிழகமே ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வியும் எழுந்தபடியே உள்ளது.. என்ற சந்தேகமும் சலசலப்பும் இன்னமும் உள்ளது.
புதிய நிர்வாகிகள்
இதைபற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களும், அனுமானங்களும் வெளியாகி கொண்டே இருக்கின்றன.. அந்த வகையில், கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட, கட்சி நிர்வாக பதவிகளில் சேர்க்கப்படாமல் இருக்கும் சிலரை அமைச்சரவை பொறுப்புகளுக்கு மாற்றப்படலாம் என்கிறார்கள். அதனால் விரைவில் அமைச்சரவை மாறுதல் பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்
அல்லது ஆர்எஸ்எஸ், பாஜகவின் கட்சி வரலாறு, வளர்ச்சி போன்றவை குறித்து பயிற்சியளிக்கும் கௌரவ பதவி கூட எச்.ராஜா போன்றோருக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.. அதேபோல, ஏதாவது ஒரு மாநில ஆளுநர் பதவி கூட வழங்கப்படலாம் என தெரிகிறது. ஏனென்றால், இவரைவிட வயதில் இளையவரான தமிழிசைக்கு தெலங்கானா மாநில ஆளுநர் பதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த தலைவரான ராஜாவுக்கு நிச்சயம் பெரிய பதவி காத்திருப்பதாக சொல்கிறார்கள்.
திமுக
அதுமட்டுமல்ல, திராவிட அரசியலுக்கு எதிராக வலுவான கருத்துகளை எடுத்து வைக்கும் தைரியம் எச்.ராஜாவுக்கு மட்டுமே இப்போதைக்கு உள்ளது.. மத, இன ரீதியான உணர்வுகளில் அதிக கவனம் செலுத்தி கருத்துக்களை சொல்லி திராவிட கட்சிகளுக்கு கிலியை ஓயாமல் தந்து கொண்டே இருக்கிறார்.. வரப்போகும் தேர்தலில் திமுகவை வெற்றி பெறாமல் இருக்க வைக்க, எச்.ராஜா போன்றோர் தான் சரியாக இருக்கும் என்று பாஜக மேலிடம் ஆரம்பத்தில் இருந்தே எச்.ராஜா மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால் அவ்வளவு சீக்கிரம் ராஜாவை விட்டுவிடாது என்கிறார்கள்.
துணிச்சல்
மேலும் சில பாஜக ஆதரவாளர்களோ, "ராஜா என்பவர் மாட மாளிகையில் இருந்தாலும் ராஜா தான்.. குடிசையில் இருந்தாலும் ராஜா தான் அவர் பேச்சும் செயலுமே விவாதம் தான்,, தைரியமாக துணிச்சலாக பேசவும்,எதிர்கொள்ளவும் பதவி மட்டுமே முக்கியமல்ல.. சுயமரியாதையும்,கௌரவமும் வீரமும் இருந்தாலே போதும்... பதவியிலே நீடிக்க இது ஒன்னும் திமுக அல்ல" என்று பதவி தராததற்கு வக்காலத்து வாங்கி கொண்டும் வருகிறார்கள். எப்படி இருந்தாலும், எதையும் மனசில் வைத்து கொள்ளாமல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு எச்.ராஜா வாழ்த்து சொன்னதை பாராட்டவே செய்யலாம்!