Exclusive: கோமாளித்தன முடிவுகளை விமர்சித்தால் ஜெயிலா.. கார்த்தி சிதம்பரம் எம்பி ஆவேசம்
சென்னை: மத்திய அரசின் கோமாளித்தன முடிவுகளை விமர்சித்தால் ஜெயிலா..? என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆவேசமாக கேட்டுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள நிலையில், அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.. அதன் விவரம் பின்வருமாறு;
கேள்வி: உங்கள் தந்தை சி.பி.ஐ.காவலை தொடர்ந்து நீதிமன்ற காவலில்(சிறையில்) உள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் நாடகம் இது. இதே நாடகத்தை கடந்தாண்டு எனக்காக அரங்கேற்றினர். அப்போது அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்கொண்டேன். அதேபோல் எனது தந்தை விவகாரத்திலும் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக கையாள்வோம்.
கேள்வி: ப.சிதம்பரம் மனதளவில் சோர்ந்துவிட்டது போல் தெரிகிறதே..?
பதில்: நீங்கள் சொல்வது போல் சோர்ந்தெல்லாம் போகவில்லை. அவர் மிகுந்த மனவலிமை படைத்தவர். அதேபோல், நானும் சரி எனது குடும்பத்தினரும் சரி மிகுந்த மன வலிமையுடன் தான் இருந்து வருகிறோம். இன்று கூட ஏர்செல் மேக்சிஸ் வழக்கு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்னவோ சாட்சி வைத்திருக்கிறோம், ஆவணங்களை திரட்டியிருக்கிறோம் என இத்தனை நாட்களாக கூறிய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வாதாட முடியாமல் ஏன் பின்வாங்கினார்கள். இதில் இருந்தே தெரிய வேண்டாமா, எங்களை துன்புறுத்த நடத்தப்படும் நாடகம் இதுவென்று.
கேள்வி: மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என பல இடங்களில் கூறியிருக்கிறீர்கள்..உங்கள் தந்தையை மட்டும் பழிவாங்க வேண்டிய அவசியம் என்ன?
பதில்: ஏனென்றால், ப.சிதம்பரத்தை தவிர வேறுயாரும் இந்த அரசாங்கத்தை தீர்க்கமாக விமர்சிக்கவில்லை. பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் மோடி அரசு எடுக்கும் கோமாளித்தனமான முடிவுகளை ஆழமாக எனது தந்தை விமர்சித்து வருகிறார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் தவறுகளை அழுத்தம் திருத்தமாக தனது வாதங்கள் மூலம் முன்வைக்கிறார். எனது தந்தை அளவுக்கு மோடியை விமர்சித்து வேறு யாரும் பேசுவதில்லை. ஆகையால் பழிவாங்கப்படுகிறோம்.
கேள்வி: அண்மையில் மத்திய அரசுக்கு சவால் விடுத்து உங்கள் குடும்பத் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது..அதற்கான காரணம்?
பதில்: எனக்கு கணக்கில் இல்லாத சொத்து இருப்பதாக பத்திரிகைகள் மூலம் சித்தரிக்கும் வேலைகள் நடைபெற்றன. எனக்கு எங்கு கணக்கில் இல்லாத சொத்து இருக்கிறது.. எனது சொத்துக்கள் முழுவதும் முறையாக கணக்கில் உள்ளன. அதை வெளிப்படுத்தவே அறிக்கை விடுத்தோம்.
கேள்வி: உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்..?
பதில்: வழக்கை சட்டரீதியாக பார்த்துக்கொள்வோம்.
கேள்வி: ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கையை காங்கிரஸில் உள்ள சிலரே கொண்டாடுவதாக கூறப்படுகிறதே..?
பதில்: முழுக்க முழுக்க பொய். என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி என்றால் சோனியாகாந்தி தான் எல்லோருக்கும் மேலானவர். அவருடைய ஆதரவு நேரடியாக எங்களுக்கு உண்டு. எனது தந்தை கைது செய்யப்பட்ட பிறகு சோனியாகாந்தி அவர்களே என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து கொள்கிறார். இதற்கு மேல் எனக்கு எதுவும் வேண்டாம் என்றார் கார்த்தி சிதம்பரம்.