நாங்க 6 மணி நேரத்தில ஓடினோம்.. ஆனால் கமல்.. எச். ராஜா அடடே கேள்வி
கமலுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: "புயல் பாதித்து 6 மணி நேரத்தில் நாங்கள் ஓடினோம்.. ஆனால் கமல் 17-வது நாளில் பார்வையிட போயிருக்கிறார்" என்று எச். ராஜா கூறியுள்ளார். எனவே 30 வருடமாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
கொருக்குப்பேட்டையில் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசும்போது கமலை கடுமையாக தாக்கி பேசினார்.
எச்.ராஜா சொன்னதாவது:
கஜா புயல் தாக்கி 6 மணி நேரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று மக்களோடு மக்களாக நின்றார். அதுபோலதான் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நானும், தொண்டர்களும் களத்தில் இன்று வரை நிற்கிறோம்.
மணணெண்ணை
மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்தும் வருகிறோம். இதைதவிர மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாள் புயல்பாதிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருந்து, மண்ணெண்ணை முதல் எல்லா நிவாரணமும் கிடைக்க வழி செய்தார்.
பாஜகவின் செயல்பாடுகள்
எல்லாவற்றிற்கும் மேலாக பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. இப்படியெல்லாம் மத்திய பாஜக செய்து கொண்டு இருக்கிறது.
17-வது நாள்
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை 17-வது நாளில் போய் பார்க்கிறார் கமல். இதில் மத்திய அரசையும் குற்றம் சொல்கிறார். 30 வருஷமாக தமிழ் மக்களை சினிமா மோகத்திலே வைத்திருந்த கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?
திமுகவை தோலுரிப்போம்
கமல் மட்டும் இல்லை, இதே போல ஸ்டாலினும் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2010-தானே புயல் வந்ததே? அப்போ போய் கருணாநிதி பார்த்தாரா? இல்லை மன்மோகன்சிங் தான் பார்த்தாரா? அதனால் மீறி மோடியை விமர்சித்துகொண்டே வந்தால், திமுகவை தோலுரித்து காட்டுவோம்" என்றார்.