ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை சின்னம்.. தமிழ்நாட்டில் நினைத்ததை சாதிக்கும் பாஜக!
அதிமுக, இரட்டை இலை சின்னம் சிதறாமல் முடங்காமல் இருக்க வேண்டும் என்ற பாஜகவின் இலக்கு நிறைவேறுகிறது.
சென்னை: லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை சிலை இன்னம் இருப்பதுதான் கை கொடுக்கும் என்கிற பாஜகவின் வியூகம் இப்போது வெற்றிகரமான இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் குறிப்பிடும்படியான வெற்றிகளை பெற்றாக வேண்டும் என்ற இலக்கில் பாஜக மாநில தலைமையும் டெல்லியும் படுதீவிரமாக உள்ளது. 2014-ம் ஆன்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே பாஜக எம்பியாக வென்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக மீண்டும் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை லோக்சபா தேர்தலில் பாஜக, தனித்து நின்று வெல்லவே முடியாது என்பது அக்கட்சிக்கு நன்றாகவே தெரியும். தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் அதிமுகவின் வாக்கு வங்கியை திடமாக நம்பி நிற்கிறது பாஜக. ஆனால் அதிமுகவோ ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் என ஆளுக்கொரு திசையில் சிதறிக் கிடக்கின்றன. இதுதான் பாஜகவை ரொம்பவே கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தது.
அதிமுகவின் அத்தனை அணிகளையும் ஒருங்கிணைப்பது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தக்க வைப்பது என்பதுதான் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான தமிழ்நாட்டு வியூகமாக பாஜக வைத்துக் கொண்டது. இதில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி எந்த சலசலப்பும் காட்டாமல் அப்படியே பாஜகவை முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்டது. ஆனால் அதிமுகவின் இபிஎஸ் அணி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாம், ஆகக் கூடுமானவரை பாஜகவிடம் இருந்து விலகிச் செல்லவே நினைக்கிறார். அப்படித்தான் ஒவ்வொரு முறையும் தன் செயல்பாடுகளை வைத்துக் கொள்கிறார். ஆனால் அவ்வளவு எளிதாக எடப்பாடி பழனிசாமியை பாஜக விட்டுவிடவும் இல்லை.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக தமது வியூகத்தை அரங்கேற்றும் களமாக அதி அற்புதமாக பயன்படுத்தி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே அதிமுகவின் இரு அணிகளுமே போட்டி போடக் கொண்டு பாஜகவின் தலைமை அலுவலகத்தில் காத்து கிடந்தன. பாஜகவின் தலைவர்கள்தான் அதிமுக தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த காலம் மலையேறிப் போய் பாஜகவுக்காக காத்திருக்கும் பரிதாப நிலைமை உருவானது. இது பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
அடுத்ததாக, இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்; தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்றெல்லாம் ஏகத்துக்குமான வதந்திகள் பரவின. ஆனால் பாஜக தரப்பு அத்தனைக்கும் அமைதி காத்தது. ஒருகட்டத்தில் இடைத்தேர்தலை பற்றி அக்கறையே இல்லை என்கிற தொனியை வெளிப்படுத்தியது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் மாறி மாறி வேட்பாளரை அறிவித்தன. இதில் ஓபிஎஸ் அணி உச்சமாக சென்று, பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் வாபஸ் பெறுவோம் என விசுவாசத்தை காட்டியது.
இந்த நிலையில் அதிமுகவின் இபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அத்தனை நிலைமைகளையும் ஒருசேர மாற்றிவிட்டது. இன்னமும் சொல்லப் போனால் பாஜகவின் வியூகம் எளிதாக நடைமுறைக்கு வந்துவிட்டது எனலாம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் இப்போது இபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தென்னரசுவையே ஆதரிக்கின்றனர். இதனால் ஓபிஎஸ் தரப்பும் அதே வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை விசுவாசம் காட்டிய ஓபிஎஸ்க்கு இப்போது தமிழ்நாடு பாஜக அட்வைஸ் செய்து இபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிக்க சொல்கிறது. இதில் விரக்தியும் வேதனையும் ஓபிஎஸ் தரப்புக்குதான்.
தற்போதைய சூழலில் அதிமுகவி இபிஎஸ் அணி அறிவித்த வேட்பாளர் ஒருங்கிணைந்த அதிமுகவின் வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்யவே வாய்ப்புகள் இருக்கிறது. அதன்பின்னர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஒருங்கிணைந்த அதிமுக வேட்பாளரை ஆதரிப்போம் என பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுகவின் அணிகளை ஒருங்கிணைத்து இரட்டை இலை சின்னத்தை லாவகமாக தக்க வைப்பதில் பாஜக முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்கள் இந்த நிலைமையை தொடர வைத்தால் லோக்சபா தேர்தலின் போதும் அதிமுகவின் முதுகில் இரட்டை சிலை சின்னத்தின் வாக்குகள் தயவில் நினைத்ததை அறுவடை செய்ய முடியும் என்கிற கனவும் நிறைவேறும் என காத்திருக்கிறது பாஜக.