திரும்பும் வரலாறு.. தமிழகத்தில் பாஜக அமைத்த கூட்டணிகள்.. ஒரு ரீவைண்ட்!
சென்னை: தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடும் என்று, தமிழிசை சவுந்தரராஜன் ஒருபக்கம் சொல்லி வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு தாமரை என்ற சின்னத்தை பெருவாரியான மக்களுக்கு அறிமுகப்படுத்தியது, தமிழிசை பொன்ற மற்றொரு பெண்தான். இன்று மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது. அதே பெண்மணியின் கட்சியுடன், சேர்ந்து தாமரைக்கு தண்ணீர் பாய்ச்சி மலர வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று அமித்ஷா, பியூஷ் கோயல் போன்ற பாஜக தலைவர்கள் பெயர்கள் தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் பிரபலமாகிவிட்டன. ஆனால், 1990கள் அப்படியான காலகட்டம் கிடையாது.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பெயர்களை மட்டுமே தமிழக மக்கள் வாய்கள் உச்சரித்த காலம் அது. வாஜ்பாய் என்பவரே தூரத்து மாநிலத்துக்காரர் என்ற அளவில்தான், அதுவும், ஆகாஷவாணி ரேடியோக்கள் புண்ணியத்தால் அறிந்த விஷயமாகவே இருந்தது. ஆனால், 1998ம் ஆண்டில்தான் துணிச்சலாக அந்த ஒரு முடிவை எடுத்தார் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஜெயலலிதா நிலைமை
முதல் முறையாக ஜெயலலிதா பதவி வகித்த காலகட்டங்களில் எழுந்த ஊழல் புகார்களால் 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அதிமுக மிகவும் மோசமான தோல்வியை அடைந்தது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. மறுபக்கம், திமுக, தமிழ்மாநில காங்கிரஸ் என வலுவான கூட்டணி தமிழகத்தில் கோலோச்சியது. சினிமாவில் கோலோச்சிய ரஜினிகாந்த்தின் பகிரங்க ஆதரவும் திமுக கூட்டணிக்கே.
ஜெயலலிதாவின் வித்தியாச முடிவு
இந்த நிலையில்தான், 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைப்பது என முடிவு செய்தார் ஜெயலலிதா. பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாஜகவோடு, பெரியாரின் சுயமரியாதை பூமியிலிருந்து, அதுவும் அண்ணா பெயரை கட்சியின் பெயரில் தாங்கிக்கொண்டிருக்கும் அதிமுக கூட்டணி அமைத்ததை மொத்த இந்தியாவும் உற்றுப் பார்த்தது.
வாஜ்பாய் ஆட்சி
ஜெயலலிதாவின் முடிவில் சுய நலம் இருந்திருக்கலாம். ஆனால், அதிமுகவின் இந்த முடிவால், பாஜகவுடன் மேலும் பல கட்சிகள் கூட்டணி அமைக்க முன் வந்தன. தமிழகத்திலும், பாமக, மதிமுக இந்த கூட்டணியில் இடம் பெற்றன. 1998ம் ஆண்டு பொது தேர்தலில் 20க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகளை இணைத்து, பாஜக ஆட்சி, வாஜ்பாய் தலைமையில் அமைய இதுதான் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த தேர்தலில் தமிழகத்தில் 3 தொகுதிகளை வென்றது பாஜக. ஆனால் 13 மாதங்களில் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தார் ஜெயலலிதா. இருந்தாலும், அதற்குள்ளாக வாஜ்பாய்க்கு நாடு முழுக்க நல்ல பெயர் கிடைத்துவிட்டதை மறுக்க முடியாது.
பாஜக, திமுக கூட்டணி
1999ம் ஆண்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜகவுடன் திமுக, மதிமுக, பாமக ஆகியவை இணைந்து 26 தொகுதிகளில் வெற்றியை பெற்றன. பாஜக மட்டும் 4 தொகுதிகளை வென்றது. ஆனால் மீண்டும் பாஜகவின் கூட்டணி மாறியது. 2004 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுக, காங்கிரஸூடன் இணைந்தது. அப்போது தமிழ்மாநில காங்கிரசும் காங்கிரசோடு இணைந்திருந்ததால் அக்கூட்டணி வலுவாக இருந்தது. வேறு வழியின்றி அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தமிழகம், புதுவையில், 40 தொகுதிகளையும் இழந்து இந்த கூட்டணி முட்டை வாங்கியது.
அத்வானிக்கு ஆதரவு இல்லை
இதன்பிறகு ஜெயலலிதா, மதமாற்ற தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றார். காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்தார். இதனால் பாஜக-அதிமுக கூட்டணி முறிந்தது. 2009ம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அத்வானி. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எவ்வளவோ முயன்றார். ஆனால், அவர் முயற்சி பலன் அளிக்கவில்லை. பாஜக தனித்து விடப்பட்டது. பாஜக முட்டை வாங்கியது.
தமிழக பாஜக தேர்தல் வரலாறு
2014ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி பாஜக முதல்வர் வேட்பாளராக்கப்பட்டார். அவருக்கு ஜெயலலிதா நெருக்கமானவர் என்பதால் பாஜக-அதிமுக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் 2004ம் ஆண்டு வாங்கிய அடியை ஜெயலலிதா மறக்கவேயில்லை. எனவே கூட்டணிக்கு நோ சொல்லிவிட்டார். பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. பாஜக கூட்டணிக்கு 2 தொகுதிகளும், பாஜகவிற்கு மட்டும் இதில் 1 தொகுதியும் கிடைத்தது. இதோ இப்போது 2019ல் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது அதிமுக. 20 வருடங்களில் பாஜக தமிழகத்தில் கடந்து வந்த வரலாறு இதுதான்.