வானம் பார்த்த வானதி.. செயற்கையாய் சிரித்த தமிழிசை.. ஷாக்கில் பியூஷ்.. 'வச்சி செஞ்ச' அதிமுக தலைமை!
சென்னை: 15, இல்ல 10.. அட எட்டாவது கொடுங்கப்பா.. என்றெல்லாம் கெஞ்சி, கூத்தாடி பார்த்தாலும் பாஜகவிற்கு வெறும் 5 லோக்சபா தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி கொடுத்துள்ளது அதிமுக.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக முழுக்க, முழுக்க பாஜக தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலிலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியானதும், இது பாஜக மேலிடத்தால், கட்டாயமாக திணிக்கப்பட்ட கூட்டணி என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
எளிதாக முடியும் என்றார்கள்
இப்படி எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டி பறந்ததன் காரணமாக, பாஜகவிற்கு அதிமுக சுமார் 15 தொகுதிகளை வழங்கக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்தனர். "அதிமுக என்ன செய்யமுடியும்.. டெல்லியில் இருந்து 'அவரு' ஒரு போன் போட்டால் போதும்.. கேட்கும் தொகுதிகளை அள்ளிக் கொடுத்துதானே ஆகவேண்டும்" என்று கள்ளச் சிரிப்புடன் கடந்து சென்றவர்களும் உண்டு.
கறார் அதிமுக
ஆனால் சில நாட்களுக்கு முன்பாக சென்னை வந்த பியூஸ் கோயலிடம், அதிமுக தலைவர்கள் காட்டிய கறாரை கண்டு உண்மையிலேயே அவர் மிரண்டுவிட்டார். நள்ளிரவு தாண்டியும் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பியூஸ் கோயலால் கூட ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனவே தான் முடிவு தெரியாமல் டெல்லி திரும்பினார்.
ஷாக் அடித்தது
கொஞ்ச நாள் விட்டுப்பார்ப்போம். அன்று நள்ளிரவு நேரத்தில், நம்மை யார் என்று சரியாக தெரிந்திருக்காது. பகலில் பளிச்சென வந்து நின்று பஞ்சாயத்தை கூட்டலாம் என்று நினைத்து எத்தனையோ ஆசை கனவுகளுடன்தான் இன்று சென்னை வந்திருப்பார் பியூஷ் கோயல். ஆனால் அதிமுகவின் அதே தோரணையை பார்த்து, மின்துறை அமைச்சராக இருந்தாலும் பியூஷ் கோயலுக்கே ஷாக் அடித்துவிட்டது.
எதையோ குடுங்கப்பா
என்னதான் அப்படி இப்படி பேசினாலும், உங்களுக்கெல்லாம் 5 தொகுதிகளுக்கு மேல் ஒன்று கூட தர முடியாது என்று தனது வழக்கமான புன்னகையோடு, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதை போல நறுக்கென பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் சேர்ந்து கொண்டேன் என்று கூறிய பன்னீர்செல்வமோ, இன்று பக்கா ஜெயலலிதா வளர்ப்பு போல பிடிவாதம் காட்டினார். நெளிந்து பார்த்தார் பியூஷ். ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறுவழியின்றி 5 தொகுதிகளுக்கு ஆமாம் என்று தலையாட்டிவிட்டு, விஜயகாந்த் வீட்டை நோக்கி கிளம்பிவிட்டார். பாவம் எத்தனை கனவுகளுடன் வந்திருப்பார் .
உஷார் தலைமைதான்
இருந்தாலும் சும்மா சொல்ல கூடாது அதிமுக தலைமையை. யாருக்கு எத்தனை இடம் கொடுக்க வேண்டும், எங்கே யாரை வைக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதா போலவே இப்போதும் மிகவும் உஷாராக தான் இருக்கிறது. இதனால்தான், செய்தியாளர் சந்திப்பில் பியூஷ் கோயல் முகமே ஃபீஸ் போய் காணப்பட்டது. தமிழிசை எவ்வளவோ முயன்று பார்த்தும் செயற்கையாக சிரிக்க முடியாமல் தடுமாறினார். வானதி சீனிவாசனோ, வானத்தையே வெறித்து பார்த்தபடி நின்றார். புகைப்படத்தை பாருங்கள் உங்களுக்கே தெரியும்.