சவுகார்பேட்டையில் ஹேமமாலினியை பிரச்சாரத்திற்கு அழைத்து வரும் பாஜக.. ட்ரீம் கேர்லை மறக்க முடியுமா?
சென்னை: 1970,80-களில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினியை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அதிலும் சென்னையில் வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹேமமாலினியை அழைத்து செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் தமிழக சட்டசபையில் பாஜக உறுப்பினர்களை கணிசமான அளவில் அனுப்ப பாஜக முயற்சித்து வருகிறது.
இதற்காக வேல் யாத்திரை, பொங்கல் திருவிழா உள்ளிட்ட பிரச்சார வியூகங்களை பாஜக வகுத்தது. எனினும் இது மட்டும் போதாது தமிழகத்தில் வலுவான ஒருவர், அதுவும் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என பாஜக கருதுகிறதாம்.
அஜய் தேவ்கன்
இதனால் மதுரா எம்பியான ஹேமமாலினியை தமிழகத்தில் 4 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய வைக்க முடிவு செய்துள்ளது பாஜக தலைமை. இது மட்டுமல்லாது 5 மாநில தேர்தலிலும் நட்சத்திரங்களை பிரச்சாரம் செய்ய வைக்கவுள்ளதாம். அந்த வகையில் அனில் கபூர், அக்சய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரையும் பிரச்சாரம் செய்ய வைக்கிறது.
பயிற்சி
சென்னையில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இவர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக 4 நாட்கள் தமிழகத்தில் தங்குகிறார். வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதி என்றால் சென்னையில் சவுகார்பேட்டையில் இவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிகிறது. மேலும் தமிழகத்தில் தமிழிலேயே பிரச்சாரம் செய்யவும் இவர் பயிற்சி எடுத்து வருகிறாராம்.
ஹேமமாலினி
1980 களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஹேமமாலினி. இவரை பார்ப்பதற்காகவே ஏராளமானோர் வருவர். அதுவும் தமிழில் பிரச்சாரம் செய்கிறார் என்றால் சொல்ல வேண்டுமா. சவுகார்பேட்டையில் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து கூட்டம் கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இவர் எளிமையானவர் இல்லை என்பது பெரிய மைனஸ் பாயிண்டாகும்.
எம்பி பதவி
மதுரா தொகுதியில் இவர் எம்பி பதவிக்கு போட்டியிட்டார். அப்போது நிலத்தில் டிராக்டர் ஓட்டினார். ஆனால் வெயில் கொடுமையால் அதில் ஏசியை போட்டு டிராக்டர் ஓட்டியது கடும் விமர்சனத்திற்குள்ளானது. அது போல் இங்கும் ஏசி காரில் இருந்த படியே உள்ளே மைக் மூலம் பிரச்சாரம் செய்வாரா இல்லை மேடை அமைத்து ஏசி வைத்து அந்த மேடையில் பிரச்சாரம் செய்வாரா என தெரியவில்லை.