கூட்டணிக்கு பாஜக ரெடி.. நீங்க ரெடியா.. பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு!
நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக தயாராக இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக தயாராக இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வருகிறது. பாஜக, காங்கிரஸ், திமுக என்று எல்லா கட்சிகளும் தங்கள் கூட்டணியை உருவாக்குவதற்காக ஆலோசனை செய்து வருகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் பெரிய கூட்டணி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக எந்தக்கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறது என்று நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் பாஜக கூட்டணி வைத்து லோக் சபா தேர்தலை சந்திக்க தயாராகி இருக்கிறது. தமிழக கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடும். சம உணர்வுள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜக தயாராக இருக்கிறது.
பாஜக மட்டுமில்லாமல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை, கூட்டணி அமைத்து சந்திக்கும் நிலையிலேயே அனைத்து கட்சிகளும் உள்ளது. அதனால் பாஜகவும் கூட்டணி வைக்க தயாராகவே உள்ளது.
சிவகாசி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரிய வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்கவேண்டும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.