முருகன் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம்.. திமுகதான் டார்கெட்.. இரண்டாவது ரவுண்ட் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக
சென்னை: தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக, பாஜக தனது இரண்டாவது ரவுண்டு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது.
பாஜக தலைவர் முருகன் சென்னை கமலாலயத்தில் இன்று ஆவேசமாக கொடுத்த பேட்டி அதை அச்சுபிசகாமல் உறுதி செய்துவிட்டது.
இன்று நிருபர்களிடம் பேசும்போது, முருகன் வழக்கத்தைவிட ஆவேசமாக காணப்பட்டார். அவரது முழு அட்டாக்கும், திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினை நோக்கி சீறிப்பாய்ந்தது.
இட ஒதுக்கீடு...ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்...எல். முருகன் கேள்வி!!
ஆவேசமான முருகன்
ஒரு விஷயத்தை கூட முருகன் விடவில்லை. பட்டியலின மக்கள் பற்றி தயாநிதி மாறன் தப்பாக பேசிவிட்டார் என்பதில் ஆரம்பித்து.. ஆர்எஸ் பாரதி பட்டியலின மக்கள் நீதிபதியாக பதவியேற்றதை கொச்சைப்படுத்தி விட்டார் என்பதுவரை, சமீபத்தில் நடந்த அத்தனை சர்ச்சைகளையும் வரிசையாக பட்டியலிட்டு படையல் போட்டு விட்டார் பாஜக தலைவர்.
டார்கெட் திமுக
தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவான கட்சி, சமூகநீதிக்கான கட்சி என திமுகவுக்கு இருக்கும் பெயரை உடைக்க வேண்டும் என்ற வியூகம் பாஜக தலைவரிடம் இருப்பது அவரது பேட்டியில் தெளிவாக தெரிந்தது.
வாயை விட்டு வம்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும்கூட, தாழ்த்தப்பட்டோர் தொடர்பான விஷயங்களில் திமுக மெத்தனமாக இருக்கிறது. ஓங்கி கருத்து கூறுவது கிடையாது. அது மட்டுமின்றி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பட்டியலின மக்கள் பற்றிய திமுக தலைவர்கள் அவ்வப்போது வாய்விட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டனர். அனைத்தையும் வரிசையாக எடுத்து போட்டு விட்டார் முருகன்.
கந்த சஷ்டி
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் விவகாரத்தில் தமிழர்களின் கடவுளான முருகனின் கந்த சஷ்டியை தவறாக சித்தரித்து, வீடியோ வெளியிட்டதாகவும் இதற்கு திமுக ஆதரவு இருப்பதாகவும் தொடர்ந்து பாஜக குற்றம் சாட்டியது. சமூக வலைத்தளங்களிலும் பாஜக ஆதரவாளர்கள் திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். ஸ்டாலின் இதுவரை, கருப்பர் கூட்டத்தை கண்டிக்கவில்லை என்றும், முருகன் இன்றைய பேட்டியில் கூற மறுக்கவில்லை. ஆக மொத்தம், 2வது முறையாக திமுகவுக்கு எதிராக ரவுண்ட் கட்டியுள்ளது பாஜக.
இரு மாங்காய்கள்
இந்த நிலையில்தான் மனுநீதி பற்றி திருமாவளவன் பேசிய பேச்சையும் ஆயுதமாக கையில் எடுத்துள்ளது பாஜக. ஒரு பக்கம் வேல் பூஜை என்று முருக வழிபாட்டை கையில் எடுத்துள்ளது. நவம்பர் 6ம் தேதி முதல் வேல் யாத்திரை நடத்த உள்ளது பாஜக. வேல் யாத்திரைக்கு முன்பாக காப்பு கட்டும் பூஜை இன்று நடைபெற்றது. மற்றொரு பக்கம் பெண்களை திருமாவளவன் கொச்சை படுத்தி விட்டார் என்று கூறி பெண்கள் விஷயத்தையும் கையில் எடுத்துள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற டெக்னிக்கை பாஜக தலைவர் முருகன் கையில் எடுத்துள்ளார். இதற்கு திமுக எப்படி எதிர்வினை செய்யப்போகிறது என்பதை அடுத்தடுத்த நாட்களில் பார்க்க வேண்டியுள்ளது.