பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக பேசிய கிஷோர் கே சாமி.. கைதாகி மின்னல் வேகத்தில் ஜாமீனில் விடுதலை
பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக பேசிய பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார்.
கிஷோர் கே சாமி.. இவர் ஒரு பாஜக ஆதரவாளர்.. எப்பவுமே பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை இவர் பதிவிட்டு கொண்டே இருப்பார். இதனால் சோஷியல் மீடியால் மிகவும் பிரபலமானவர்.
அத்துடன், பெண்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்துவிடுவார். அந்த பதிவுகள் அனைத்துமே சாதீய ரீதியாகவும், மத சகிப்புதன்மை இல்லாமலும், வெறித்தனமான பதிவுகளாக இருக்கும். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இன்ன இன்ன வார்த்தைகளில்தான் பேசவேண்டும் என்ற வரைமுறை, நாகரீகம் இல்லாமல் மிக மோசமான வார்த்தைகளை அள்ளித் தெளித்து விமர்சித்து வந்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் அவதூறு பரப்பும் வகையிலும் இப்படியே பதிவுகளை போட்டு வந்ததால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.
கிஷோர் கே சாமியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று கிஷோர் கே சுவாமியை அவரது வீட்டில் கைது செய்து, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.
பின்னர், கிஷோர் சாமி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதையடுத்து, கிஷோர் கே.சுவாமி சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.
இப்படித்தான் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஒரு டிவீட்டை நடிகர் எஸ்வி. சேகர் ரீட்வீட் செய்தார். அது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் கடைசி வரை அவர் கைதாகவே இல்லை என்பது நினைவிருக்கலாம்.