"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு
விஜய் சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது
சென்னை: "அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் ஒரு வலிமையான நபர்.. நீங்கள் இருப்பது போலவே இருங்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வந்துள்ள அச்சுறுத்தல் காட்டுமிராண்டித்தனமானது.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை" என்று குஷ்பு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி அக்ரிமென்ட் போட்டதில் இருந்தே விவகாரம் வெடித்து கிளம்ப ஆரம்பித்துவிட்டது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்ப்புகளுடன், எதிர்பார்ப்புகளும் சேர்ந்து எழுந்தன.. தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படும், மதிக்கப்படும் விஜய் சேதுபதி, தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்க கூடாது என கண்டன குரல்கள் எழுந்தன.. இதனை அரசியல்வாதிகள் முதல் தமிழ் தேசிய அமைப்பை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் வரை எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து, இந்த படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு முரளிதரன் அறிக்கை வெளியிடவும், அவரது அறிக்கையை ரீட்வீட் செய்து "நன்றி.. வணக்கம்" என்று கூறி அந்த படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி.
ஆனால் அத்துடன் பிரச்சனை முடியுமா என்றால், அப்போதும் முடியவில்லை.. விஜய் சேதுபதி மகளுக்கு ஒரு என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து மிக வக்கிரமான வார்த்தைகளுடன் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது... அதுவரை விஜய் சேதுபதியை திட்டி கொண்டிருந்த மக்கள், இந்த ட்வீட்டை பார்த்ததும் அதிர்ச்சி ஆனார்கள்.. இந்த குரூர செயலுக்கு கண்டனங்களையும் தெரிவிக்க தொடங்கினர்.. இதையடுத்து, அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி முதல் பாடகி சின்மயி, டைரக்டர் அமீபர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் குஷ்புவும் இன்று ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..
அதில், "அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் ஒரு வலிமையான நபர்.. நீங்கள் இருப்பது போலவே இருங்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வந்துள்ள அச்சுறுத்தல் காட்டுமிராண்டித்தனமானது.. இது விசாரிக்கப்பட வேண்டும்.. குற்றவாளியை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை.. நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பட விவகாரம் தொடர்பாக திமுக தவிர, எல்லாருமே வாய் திறந்து கருத்து கூறிவருவது கவனிக்கத்தக்க ஒன்று!