பூங்கோதைக்கு "கொக்கி" போடும் பாஜக.. ஹத்ராஸில் நடந்தால்தான் பேசுவீங்களா?.. திமுகவுக்கு முருகன் நறுக்
பூங்கோதை எம்எல்ஏவுக்கு ஆதரவாக பேசி உள்ளார் எல். முருகன்
சென்னை: "நமது சகோதரி பூங்கோதை எம்எல்ஏவுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து திமுக தலைவர், கண்டித்தாரா அல்லது அவருக்கு ஆறுதல் சொன்னாரா? திமுக என்பது பெண்களை இழிவுபடுத்தும் கட்சி. தனது சொந்த எம்எல்ஏ வைப் பாதுகாக்க முடியாதபோது திமுக மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்? பூங்கோதை ஆலடி அருணா அவமதிக்கப்பட்டபோது கனிமொழி எங்கே போனார்? ஹத்ராஸில் நடந்தால்தான் கண்டிப்பீர்களா? உங்கள் கட்சியில் நடந்தால் அமைதியாகிவிடுவீர்களா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் எழுப்பி உள்ளார்.
திமுகவின் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை.. ஆலங்குளம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக இருப்பவர்.. இவரது குடும்பமே தீவிரமான திமுக விசுவாசி குடும்பம்.
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர்.. தற்போதும் திமுக எம்எல்ஏவாக தீவிரமாக சுழன்று வேலை பார்த்து வருபவர் பூங்கோதை.
விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா.. தொண்டர்களை பார்த்தவுடன் இறங்கி நடந்தே பயணம்
முற்றுப்புள்ளி
இந்நிலையில், பூங்கோதைக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. உட்கட்சி பூசல் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் சொல்லப்பட்டது.. தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியதால், பூங்கோதை அந்த செய்திக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து, முற்றுப்புள்ளியும் வைத்தார்.
டேமேஜ்
எனினும், திமுகவை டேமேஜ் செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் பணியாற்றிவரும் பாஜக, பூங்கோதை விஷயத்தையும் கையில் எடுத்துள்ளது... ஈரோட்டில் வேல் யாத்திரையில் கலந்து கொண்ட எல்.முருகன் இதை பற்றி சொல்லும்போது, "எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா கட்சி நிர்வாகிகளின் கால்களைத் தொட்டு மன்னிப்பு கேட்கிறார். அவர்கள் கட்சி நிர்வாகிகளாக இருந்தாலும், அதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இன்று வரை, அவரது முடிவுக்கு பொறுப்பான நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கனிமொழி
திமுக தலைவர், இந்த சம்பவத்தைக் கண்டித்தாரா அல்லது அவருக்கு ஆறுதல் சொன்னாரா? திமுக என்பது பெண்களை இழிவுபடுத்தும் கட்சி. தனது சொந்த எம்எல்ஏ வைப் பாதுகாக்க முடியாதபோது திமுக மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்? ஹத்ராஸ் சம்பவம் நடந்தபோது, கனிமொழி சென்னையில் போராட்டம் நடத்தினாரே.. ஆனால் நமது சகோதரி பூங்கோதை ஆலடி அருணா அவமதிக்கப்பட்டபோது கனிமொழி எங்கே போனார்? ஹத்ராஸில் நடந்தால்தான் கண்டிப்பீர்களா? உங்கள் கட்சியில் நடந்தால் அமைதியாகிவிடுவீர்களா?" என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
என்ன காரணம்?
சக அரசியல் துறையை சார்ந்த பிரமுகர் என்பதால் முருகன் இப்படி கேள்வி எழுப்பினாரா? அல்லது திமுகவுக்கு இழுக்கு சேர்க்க இப்படி கேள்வி எழுப்பினாரா? என்று தெரியவில்லை.. ஆனால், பூங்கோதையை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி மேற்கொள்கிறதோ என்ற சந்தேகம் மட்டும் எழுந்து வருகிறது.. காரணம், சில நாட்களுக்கு முன்புகூட, பூங்கோதை பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளிவந்தன.
அதிர்ச்சி
ஆனால், அதையும் பூங்கோதை உடனடியாக மறுத்தார். "எல்லாமே பொய்யான மற்றும் போலி செய்திகள்.. அந்த செய்திகளை எல்லாம் பார்த்துவிட்டு நானே அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.. ஒருபோதும் பாசிச பாஜகவுடன் இணைய மாட்டேன்" என்று தெளிவுபடுத்தி இருந்தார். இப்போது மறுபடியும் இதே பேச்சு எழுந்துள்ளது..
சந்தேகங்கள்
திமுகவின் முக்கிய தலைகளை பாஜகவில் கட்சியில் இணைக்கும் வேலைகளில் அக்கட்சி மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஏற்கெனவே வி.பி.துரைசாமி, கு.க.செல்வம், கேபி ராமலிங்கம் போன்றோர் பாஜக பக்கம் வந்துள்ள நிலையில், பூங்கோதைக்கு ஆதரவாக முருகன் பேசியுள்ளது பல நூறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன!