"டமார்" என முருகன் தூக்கி போட்ட குண்டு.. முதல்ல பிள்ளை பிறக்கட்டும்.. பிறகு பெயர் வைக்கலாம்!
எல் முருகன், அதிமுக ஆட்சியில் பங்கு கேட்போம் என்று கூறியுள்ளார்
சென்னை: "இன்னும் பிள்ளையே பிறக்கலையாம்.. அதுக்குள்ள பேர் வெக்கிற வரைக்கும் போயாச்சா" என்பது போல எல்.முருகனின் பேச்சை கேட்டு முணுமுணுப்புகள் ஒலிக்க தொடங்கி உள்ளது.
இந்த முறை அதிமுகவில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை.. ஏற்கனவே இருந்த கட்சிகள் தான் கூட்டணியில் மீண்டும் இடம்பெற போகின்றன என்றாலும், சீட் பஞ்சாயத்து உள்ளுக்குள் ஓடி கொண்டிருக்கிறது.
பாமக, தேமுதிக கட்சிகள் இதுபோன்ற சிக்கலில் தான் உள்ளனர்.. இதில் ஜிகே வாசன் பிடிவாதம் பிடிக்காமல் ஒருவழியாக ஒதுங்கி வழிவிட்டுள்ளார்.. அதிமுகவை தருவதை வாங்கி கொள்வார் போலும். ஆனால், கூட்டணிகளிலேயே வித்தியாசமான கட்சி பாஜகதான்.
ஆதரவு
இந்த கட்சிக்கு தமிழகத்தில் அவ்வளவாக ஓட்டு வங்கி இல்லை.. முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு வலுவானவர்களும் இல்லை.. மக்களின் ஏகோபித்த ஆதரவையும் இக்கட்சி பெற்றுவிடவில்லை... தமிழிசை என்ற ஒற்றை மனுஷி இல்லாவிட்டால், இந்த அளவுக்குகூட பாஜக தமிழகத்தில் கால் ஊன்றி இருக்க முடியுமா தெரியாது.
எல்.முருகன்
ஆனால் இவ்வளவு இருந்தும், "நாங்க சும்மா நின்றாலே 60 சீட் ஜெயிப்போம்" என்று ஒத்தை வார்த்தை சொல்லி அதிர வைத்தவர் மாநில தலைவர் எல்.முருகன்.. ஆனால், சீட் பற்றி அதிமுக வாயே திறக்கவில்லை.. இதற்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என்று அடுத்த குண்டை தூக்கி போட்டார் எல்.முருகன். அப்போதும் அதிமுக வாய் திறக்கவே இல்லை.. இறுதியாகத்தான் முதல்வர் வேட்பாளர் என்ற விஷயத்தை கையில் எடுத்தது..
சுபம்
3 மாசமாக இந்த பிரச்சனை ஓடியது.. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லப்பட்ட அதேநேரத்தில், பாஜக சார்பாகவும் யாரையும் வேட்பாளராக இதுவரை நிறுத்த முடியாத நிலைமையில் அக்கட்சி உள்ளது.. அதிமுக தலைமைக்கு 3 மாசம் பிரஷர் தந்த நிலையில், இப்போதுதான் எல்லாம் சுமூகமாகி உள்ளதாக தெரிகிறது.. ஏற்கனவே பிரதமர், முதல்வரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய தன் கையை ஓங்க வைத்த நிலையில், மறுபடியும் பிரதமர் இங்கே வர போகிறார்.. அதனால், மிச்சமுள்ள பிரச்சனைகளும் சுபம் ஆகும் என்றே தெரிகிறது.
ஆட்சியில் பங்கு
இப்படிப்பட்ட சூழலில்தான் முருகன் அந்த வார்த்தையை சொல்லி உள்ளார்.. நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேட்டி தரும்போது, "தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது... தேர்தலுக்கு பின், ஆட்சியில் பங்கு பற்றி மேலிடம் முடிவு செய்யும்" என்று பெரிய சைஸ் குண்டு எடுத்து அதிமுக பக்கம் வீசியுள்ளார்..
நோட்டா
இதுதான் மக்களிடம் சலசலப்பை கிளப்பி வருகிறது.. "முதல்ல நோட்டாவை ஜெயிச்சு வரட்டும்.. அப்பறம் டிபாசிட் வாங்கட்டும், அப்புறம் ஜெயிச்சு காட்டட்டும்.. அதிலும் அதிக இடங்களில் ஜெயிச்சு காட்டட்டும்.. அப்புறமா ஆட்சியில் பங்கு பங்கு பற்றி பேசலாம்.." என்ற கருத்துக்கள் பாஜகவை நோக்கி சொல்லப்பட்டு வருகின்றன..
விவாதங்கள்
கூட்டணியில் இன்னும் எத்தனை சீட் என்பது உறுதியாக தெரியாத நிலையில், அதில் எத்தனை சீட்டுகளில் பாஜக வெற்றி பெற போகிறது என்பதும் நிச்சயம் இல்லாத சூழலில், திடுதிப்பென்று ஆட்சியில் பங்கு என்று முருகன் சொன்னது விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது. இதெல்லாம் அதிமுக தலைமை நன்றாக கவனித்து கொண்டுதான் வரும் என்றும் நம்பப்படுகிறது.
தமிழகம்
அதுமட்டுமல்ல, கொரோனா சமயத்தில் பிரதமர் கேர் நிதி, பேரிடர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கி தரும் முயற்சியில் தமிழக பாஜக இறங்கவில்லை... நீட் தேர்வுக்கு பிள்ளைகள் இங்கே தவித்து கிடக்கும்போது, அது சம்பந்தமான எந்தவித அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை... எந்தவித திட்டங்களையும், நன்மைகளையும் இதுவரை பெற்று தரவில்லை... எரிபொருள் சுங்ககட்டண உயர்வு மக்களை நெருக்கி தள்ளுகிறது. பெட்ரோல் விலை உயர்வு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீள முடியாமல் உறைந்து கிடக்கிறார்கள்.. இதையெல்லாம்கூட தமிழக பாஜக பரிசீலித்தால் நன்றாகத்தான் இருக்கும்..!