எப்படி இருந்த பாஜக இப்படி ஆகிப்போச்சே.. மேப்பை லைட்டா உத்துப்பாருங்க.. உண்மை தெரியும்!
Recommended Video
சென்னை: மளமளவென இந்தியா முழுக்க பரவி வந்த பாஜக ஆட்சிக்கு இப்போது பிரேக் விழுந்துள்ளது.
வட இந்தியா கட்சி என்று அழைக்கப்பட்டு வந்த பாஜக அங்கு மட்டுமின்றி கூட்டணியின் துணையோடு வடகிழக்கிலும் கால் பதித்தது. ஆந்திராவிலும் முன்பு தெலுங்கு தேசம் அதன் கூட்டணி கட்சி ஆட்சிதான் என்பதால் தென் இந்தியாவிலும் கால் பதித்துவிட்டதாக குதூகலித்தனர் அக்கட்சி தலைவர்கள்.
ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி வரும்போதா இப்படி ஆக வேண்டும். எப்படி விரிவடைந்து வந்ததோ, அதுபோல, இப்போது பின்நோக்கி சுறுக்குகிறது பாஜக. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற முழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்தார். ஆனால், அவரது முழக்கம் பலிக்கவில்லை. பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தானை கூட காங்கிரஸிடம் இழக்கும் அளவுக்கு பாஜக நிலைமை போயுள்ளது. இந்த மேப்புகள் உங்களுக்கு அந்த வித்தியாசத்தை காட்டும்.
கால் பதித்த காவி கொடி
இந்த வரைபடத்தில் நீங்கள் பார்ப்பது 2014ம் ஆண்டின் நிலைமை. அப்போதுதான் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. காவி வண்ணத்தில் குறிக்கப்பட்டவை பாஜக ஆளும் மாநிலங்கள். நீல வண்ணத்தில் குறிக்கப்பட்டவை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள். பச்சை வண்ணம் பிற கட்சிகளால் ஆளப்படுவது.
நான் போகிறேன் மேலே..மேலே..
அடுத்த வரைபடம் 2015ம் ஆண்டின் நிலவரம். அப்போது காஷ்மீரிலும் கூட்டணி ஆட்சியமைத்து இடம் பிடித்துக்கொண்டது பாஜக. இந்தியாவின் தலைப்பகுதியும் காவி வண்ணத்தால் குறிக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்க முடியும். அப்போது பாஜக தலைவர்கள் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஆல் ஏரியா ஐயாதான் கிங்கு
2016ம் ஆண்டில், இந்திய வரைபடத்தில் கைப்பகுதி போல காட்சியளிக்கும், வட கிழக்கு மாநிலங்களிலும், கால் பதித்தது பாஜக. அங்கும் கூட்டணி உதவியோடுதான் என்பது தனிக்கதை. இருந்தாலும், வட கிழக்கில் வெற்றி பெற்றுவிட்டோம். இனி இந்தியாவெங்கும் தாமரை மலரும் என்று மார்தட்டினர் அக்கட்சி தலைவர்கள்.
எங்கும், காவி எதிலும் காவி
கடந்த ஆண்டு 2017ல் இன்னும் பலமானது பாஜக. மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காவிக்கொடிதான் பறந்தது. இமாச்சல பிரதேசமும், காவி கன்ட்ரோலில் வந்தது. நான் வளர்கிறேனே மம்மி.. என்பதை போல துள்ளி குதித்தனர் பாஜக தலைவர்கள்.
இப்பிடி ஆகிப்போச்சே
இப்போது 2018ல் 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகான நிலைமை இது. காஷ்மீரில் பாஜக கூட்டணி ஆட்சி பறிபோனதால், ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. எனவே அது இளஞ்சிவப்பு வண்ணத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால் குறிப்பாக பார்க்க வேண்டிய மாற்றம், மத்திய இந்தியாவில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் என இந்தியாவின் குறுக்கு வெட்டு தோற்றத்தையே மாற்றியுள்ளது, இந்த மேப்பை தயவு செய்து பாஜகவினர் பார்க்காமல் மறைத்தை வைத்துக்கொள்ளுங்கள். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அவர்களின் கனவுகளில் இது கலவரத்தை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது.