ஆதாரம் என்ன? செந்தில் பாலாஜி.. அண்ணாமலை மாறி மாறி பதிலடி.. ட்விட்டரில் கடும் மோதல்
சென்னை : மின்வாரியத்தில் ஊழல் நடப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு யூனிட் 20 ரூபாய் வரை வாங்கப்படுவதாக கூறியதுடன், ஆதாரம் இதுதான் என்று வெளியிட்ட அடுத்தடுத்த ட்வீட் பதிவுகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதிலடி கொடுத்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எனர்ஜி கம்பெனி, 4000 முதல் 5000 கோடி ஆர்டரை தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள உள்ளது. தற்போது அந்த கம்பெனி நொடிந்து போய் உள்ளது. ஆனால் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் அதை வாங்கி, தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து 4000 கோடி முதல் 5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதை போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு லாபத்தை ஏற்படுத்த இந்த முயற்சி நடக்கிறது. கம்பெனி பெயரை இப்போது குறிப்பிட விரும்பவில்லை.
அவர்கள் போகிற பாதை அதை நோக்கி போகிறது. நஷ்டமடைந்த நிறுவனத்தை வாங்கி, மின்சார வாரியத்திடமிருந்து ஒப்பந்தம் போட்டு லாபம் சம்பாதிக்க உள்ளனர். இதனால், மின்சார சப்ளை கூடி விடும் என்று காட்டுவார்கள். திமுக அரசுக்கு இது கை வந்த கலை. எனவே எச்சரிக்கையாக சொல்கிறேன். 2006-11 ஆட்சி கால பாதைக்கு திமுக போகாது என நம்புகிறேன். அப்படி போனால் எங்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
விபத்தில் சிக்கிய பெண்ணை கண்டதும் வாகனத்தை நிறுத்தி, முதலுதவி செய்த பிரியங்கா காந்தி!
என்ன காரணம்
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட ட்வீட் பதிவில், தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்தத் தொகையும் வழங்கப்படாமல் திடீரென ரூ.29.64 கோடி வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன? இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அடுத்த வாரம்
அத்துடன் மின் வாரியத்தின் சில ஒப்பந்ததாரர்களின் பெயர்களையும், அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்ட பணம் தொடர்பான எக்ஸல் சீட் புகைப்படத்தையும் அண்ணாமலை பகிர்ந்தார். அந்த ட்வீட்டின் இறுதியில் இந்த வாரம் அனல், அடுத்த வாரம் சோலார். அடுத்த வாரத்துக்கு பின் தயாராகிக் கொண்டிருக்கும் 'பெரிய' நிறுவனம் என அண்ணாமலை கூறியிருந்தார்.
ஒப்பந்தம் எப்படி
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 4,320 மெகாவாட் நிறுவுத்திறன் நம் மாநில மின்வாரியத்துக்கு உள்ளது. அதில் கடந்த ஆட்சியின்போது 1,800 மெகாவாட்தான் உற்பத்தி நடந்திருந்தது. பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட காரணங்களினால் கடந்த ஆட்சியில் உற்பத்தியானது, அதன் நிறுவுத்திறனை விடவும் குறைக்கப்பட்டிருந்தது. குறைக்கப்பட்ட உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் மாநிலத்தின் தேவையை மாநிலமே நிறைவாக செய்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் உத்தரவிட்டு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தார். முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தற்போது 3,500 மெகா வாட் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 900 மெகா வாட் அளவு மின்சாரம் தனியார் நிறுவனங்கள் மாநில அரசுக்கு தருகின்றன. 4,000 மெகா வாட் தருவதாக தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்களால் முழுவதுமாக அதைச் செய்ய முடியவில்லை. இந்த இடைவெளியை குறைக்க, இந்திய மின் சந்தை வழியாக தற்போது நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
320 மில்லியன் யூனிட்
தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்திய மின் சந்தையில் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி தமிழகத்தின் சராசரி தேவையான 320 மில்லியன் யூனிட் பெறப்படுகிறது. இதில் 24.09.2021 முதல் 19.10.2021 வரையிலான காலகட்டத்தில் இந்திய மின் சந்தையில் நாம் மொத்தமே கொள்முதல் செய்தது, 397 மில்லியன் யூனிட் மட்டுமே. பெறப்பட்ட இந்த 397 மில்லியன் யூனிட்டும் கூட, ரூ.20 க்கு கொள்முதல் செய்யப்பட்டது, 65 மில்லியன் யூனிட் மட்டுமே. அதாவது, கொள்முதல் செய்யப்பட்டவற்றிலேயேவும், வெறும் 1.04% மட்டும்தான் அதிக விலையில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு குறைவு
இதுவே குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரூ.20க்கு 131 மில்லியன் யூனிட்; ரூ.20 க்கு 52 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வெறும் 1.04% மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது மிக மிக குறைவும்தான். நிலக்கரி தட்டுப்பாட்டால்தான் அங்கு போய் கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடி தமிழ்நாடு மின்துறை மிகச்சிறப்பாகவே செயல்படுகிறது.
அறிந்துவைத்து பேசுங்கள்
இவற்றையெல்லாம் அறியாமல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நம் மாநில அரசு 4 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஒரு கட்சியின் தலைவர், நான் மேற்குறிப்பிட்ட தகவல்களையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டு பேச வேண்டும். குறிப்பாக நம் மாநிலத்தில் எங்கிருந்து மின்சாரம் வாங்குகிறோம், எவ்வளவு வாங்கியுள்ளோம், பிற மாநிலங்களில் எவ்வளவு வாங்கியுள்ளார்கள், இங்கு நிலைமை எவ்வளவு கட்டுக்குள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்துவைத்து பேசவேண்டும்" என்றார்.
செந்தில் பாலாஜி பதிலடி
மேலும் தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலையின் ட்வீட்டை டேக் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை." என்று கூறியிருந்தார்.
அண்ணாமலை பதிலடி
இதையடுத்து பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்ய பட்டுள்ளது! உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை! என்று புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜியினி பதிவினை டேக் செய்து, முதல்வர் ஸ்டாலின் கடந்த 2016 காலக்கட்டத்தில் பேசிய வீடியோ தான் ஆதாரம் என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் திமுக மற்றும் பாஜகவினரிடையே வார்த்தை மோதல் அதிகமாக உள்ளது.