நீட் அனிதாவிற்கு ஒரு நியாயம்.. அரியலூர் மாணவிக்கு ஒரு நியாயமா.. கேட்கிறார் எச்.ராஜா
சென்னை: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில மையக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நெருக்கடி
அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஹெச் ராஜா பல்வேறு விவகாரங்களில் திமுக அரசை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார். அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மதமாற்றத்திற்காக அரியலூர் மாணவிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. மதம் மாறினால் இலவச கல்வி தருவதாக எல்லாம் கூறி நெருக்கடி கொடுத்துள்ளனர்,
வாக்குமூலம்
இதற்கு மறுத்த அந்த சிறுமியைக் கழிவறையைச் சுத்தம் செய்யுமாறு கூறி கஷ்டப்படுத்தியுள்ளனர். இதனால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீதிபதியிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை எனச் சொல்கிறார்கள். அந்த ஆடியோவை ஏன் அவர்கள் வெளியிடவில்லை. இதில் கட்டாய மதமாற்றம் இல்லை என்று கூறும் மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
மதமாற்ற தடை சட்டம்
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தமிழக கல்வித் துறை அமைச்சர் கூறியதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் இப்படி கட்டாய மதமாற்றங்கள் நடைபெற்றே வருகிறது. இதுபோல மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்ட பல மாணவிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் வேண்டும். இது தொடர்பாக பாஜக ஆதரவுடன் மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம்.
அனிதா
அனிதாவுக்காகக் கூச்சல் போட்ட நபர்கள் எல்லாம் இப்போது இப்போது எங்கே உள்ளனர். அனிதாவுக்கு ஒரு நியாயம். அரியலூர் மாணவிக்கு ஒரு நியாயமா? அதேபோல இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களைத் தண்டிப்பதை விட்டு விட்டு வீடியோ எடுத்த நபரையும் கைது செய்யத் தமிழ்நாடு போலீஸ் முயல்கிறது. திட்டமிட்டுக் குறிப்பிட்ட பிரிவினரை மிரட்ட இந்த திமுக அரசு முயல்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
அதேபோல திமுக ஆட்சியில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்கிறது. மதுரையில் 150 ஆண்டுகள் பழைமையான முனீஸ்வர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. சட்டம் தெரிந்தவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனரா என்பதே சந்தேகமாக உள்ளது. சில இடங்களில் பட்டா உள்ள கோயில்களும் கூட இடிக்கப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். திமுக வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில் தான் ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசுக்கு மமதை வேண்டாம். இல்லையென்றால் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கே தாங்காது.
பொங்கல் பரிசு
அதிமுக ஆட்சியிலும் தான் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டது. ஆனால், அப்போது எந்த விதமான குற்றச்சாடுகளும் எழவில்லை. ஆனால், இப்போது அனைத்து இடங்களிலும் பொங்கல் பரிசுப் பொருள்கள் தரமற்றவையாக உள்ளதாகப் புகார்கள் உள்ளது. வெல்லம் உருகி உள்ளது, மற்ற பொருட்களும் தரமற்ற உள்ளது. இதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழலில் திளைத்த அரசாக திமுக அரசு உள்ளது.
யார் கூறுவது உண்மை
புகார் அளித்த நபரையே திமுக அரசு கைது செய்துள்ளது. இதனால் மனம் உடைந்த அவரது மகன் தற்கொலை செய்துள்ளார். இந்த ஆட்சியில் குற்றம் செய்தவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். தவறுக்கு நியாயம் கேட்பவர்கள் தான் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறுகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் தவறே நடக்கவில்லை என என அமைச்சர் சொல்கிறார் அமைச்சர் மற்றும் முதல்வரின் கருத்துகள் நேர்மாறாக உள்ளது. இதில் யார் கூறுவது தான் உண்மை" என்று அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.