ஜாமின் இல்லை.. பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமனின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
சென்னை : ட்விட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக சார்பில் கோவை மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜனவரி 31-ந் தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கலந்துகொண்ட சென்னையை சேர்த்த பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமியர்களின் புனிதரான நபிகள் நாயகம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில், கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த ஜூலை மாதம் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுற்றுலா பயணி போன பாதை எல்லாம் .. கொரோனா கிடுகிடு.. சீனா அதிர்ச்சி. பள்ளிகளை மூட உத்தரவு
போலீசில் புகார்
இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், பாஜவை சேர்ந்த கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு,மோதல்,கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்/
வலுக்கட்டாயம்
அதன் அடிப்படையில் கடந்த 16 ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாண ராமனை கைது செய்ய சென்னை வளசரவாக்கம் வந்தனர். ஆனால், கல்யாணராமன் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு போலீசாரோடு செல்ல மறுத்தார். இதையடுத்து கல்யாண ராமனை வலுக்கட்டாயமாக போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.
இடையீட்டு மனுவும் தாக்கல்
கைது செய்த நிலையில் அவர் ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதே நேரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர் கோபிநாத் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
தவறான முன்னுதாரணம்
இந்த மனு நீதிபதி தாவூத் அம்மா முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண், "கல்யாணராமன் உள்நோக்கத்தோடு மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செயல்படுவதாகவும், மத ரீதியாகவும், மத நம்பிக்கை தொடர்பாகவும் பேசக் கூடாதென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அவர் தொடர்ந்து மீறி வருவதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சமூகத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் எடுத்துரைத்தார். புகார்தாரர் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி கல்யாண ராமனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.