முதல்வர், துணை முதல்வரை திடீரென நேரில் சந்தித்த எல் முருகன்.. வைத்த டிமாண்ட்.. ஏமாற்றம்
சென்னை: தமிழக பாஜக தலைவர் எல் முருகன் நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்படியே வேல் யாத்திரைக்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த கோரிக்கை முதல்வர் ஏற்கவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக பாஜக தலைவர் எல் முருகன், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களுக்கு வேல் யாத்திரை செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
ஆனால் இதுவரை தமிழக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. முருகன் எங்கு சென்றாலும் அவரையும், அவருடன் செல்லும் பாஜகவினரையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதேபோல் உயர்நீதிமன்றமும் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை.
திடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..?
எல் முருகன் வாழ்த்து
இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் நேற்று மாலை திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை ஆர்ஏ புரம் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். இருவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வரிடம் வைத்த கோரிக்கை
அப்போது வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல் முருகன் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் அனுமதி அளிக்க இயலாது என முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்யையும் சந்தித்தார்
இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக துணை தலைவர்கள் கேஎஸ் நரேந்திரன், அண்ணாமலை, அமைப்பு செயலாளர் விநயாகம் உடன் இருந்தனர். தொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தையும் அவரது வீட்டில் முருகன் சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்.
பீகார் போல் வெல்வோம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழகத்தில் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தார். பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதை போன்று தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று முருகன் நம்பிக்கை தெரிவித்தார். பாஜகவின் வேல் யாத்திரை குறித்து அண்மையில் உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு கடுமையான வாதத்தை முன்வைத்தது. அரசியல் காரணங்களுக்காக நடத்துவதாகவும், மக்கள் சிரமத்தை சந்தித்ததாகவும் கூறியது.