தமிழக ஊடக விவாதங்களில் பாஜக பங்கேற்காது.. ஊடகங்களை குற்றம்சாட்டி தமிழிசை பரபரப்பு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் நிகழும் ஏதேனும் ஒரு பிரச்னை அல்லது அரசியல் நகர்வுகள் குறித்து ஊடங்கள் அரசியல் கட்சிகளை அழைத்து விவாதம் நடத்தி வருகின்றன.
இந்த விவாதங்களில் சில சமயங்களில் யாரோ ஒரு தரப்புக்கு சாதமான விவாதங்களாக முடிந்துவிடுவதும் உண்டு. சில கட்சிகள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க போதிய நேரத்தை ஊடகங்கள் வழங்க மறுப்பபதாக அடிக்கடி குற்றம்சாட்டுவது உண்டு. ஏற்கனவே திமுக, அதிமுக, பாமக என எல்லா கட்சிகளுமே இப்படி அறிவித்து பின்னர் திரும்ப பெற்றுள்ளன.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தமிழகத்தில் ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் " தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயளிப்பதாக உள்ளது.
ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சம வாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பிரநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்ப்பட்டுள்ளது" என கூறியுள்ளார். இந்த தடை உத்தரவு ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.