உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களில் அதிக சீட் வேண்டும்.. அதிமுகவுக்கு பாஜக டபுள் செக்?
சென்னை: அமித்ஷாவின் முழு கவனமும் தமிழக பா.ஜ.க.வை நோக்கி திரும்பிவிட்டதில் அக்கட்சி நிர்வாகிகளை விட அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களின் வயிறுதான் கலங்கிக் கிடக்கிறது. நெத்தியடியாய் காய்களை நகர்த்தி வெச்ச குறியை வீழ்த்துவதில் கிங் ஆஃப் கிங்தான் அமித்.
தாறுமாறான உறுப்பினர் சேர்ப்பு, கன்னாபின்னான்னு கட்சி வளர்ப்பு! என்று சொந்த கட்சியினரை அவர் போட்டு உலுக்கி எடுத்துவிடுவார். அவர் நினைத்ததை விட ஒரு படி மேலே சிறப்பாக வேலை முடியவேண்டும்! இல்லையென்றால் பதவி காலியாகி பஞ்சராகி உட்கார வேண்டிதான்.
ஆனால் காலில் விழுந்து கதறினாலும் தாமரைக்கு ஓட்டுப் போட மாட்டேன் என அழுத்தம் காட்டும் தமிழகத்தில் எப்படி கட்சியை வளர்ப்பது? இதனால்தான் அமித்ஷாவின் வருகையால் நொந்து கிடக்கின்றனர் தமிழக பா.ஜ.க. தலைகள். ஆனால் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் இதில் நோவது ஏன்?....
விஷயம் இருக்கிறது.
வேலூரை 3ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு
அதிமுக பாஜக
அதை அக்கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது "அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஜெயித்தே ஆகணும்னா பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கவே கூடாதுன்னு எங்க கட்சி முடிவில் இருந்துச்சு. ஆனால் சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா அவங்க நிர்வாகிகளிடம் ‘அடுத்தும் அ.தி.மு.க.வோடுதான் கூட்டணி. இது உறுதி'ன்னு சொல்லிட்டார். இதை மறுத்தோ, எதிர்த்தோ நிலைப்பாட்டை எடுக்க எங்கள் கட்சி ஆளுங்களுக்கு தைரியமில்லை. ஆக இது ஒரு செக்.
நஷ்டம்தான்
கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல எங்க கூட்டணியில் பி.ஜே.பி.க்கு ஒதுக்கப்பட்ட சீட் வெறும் ஐந்து. பேச்சுவார்த்தைக்கு பியூஸ் கோயல் வந்ததாலே இவ்வளவு குறைவா கொடுத்து, ‘உங்க கட்சிக்கு செல்வாக்கே இல்லை'ன்னு பேசி முடிச்சு அனுப்பிட்டாங்க. ஆனால் அவங்க கூட சேர்ந்த வகையில் எங்களுக்கும் (அ.தி.மு.க.) செல்வாக்கு இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.
அதிக சீட் வேண்டும்
இந்த நிலையில் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மிக அதிகமான இடங்களை நாங்க ஒதுக்கியே ஆகணும்னு அமித்ஷா சொல்லியிருக்கிறார் அவங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யும்போது. அந்த தகவல் எங்க தலைமைக்கும் பரிமாறாப்பட்டாச்சு. உள்ளாட்சி தேர்தல்னா மேயர், சேர்னில் ஆரம்பித்து கவுன்சிலர் வரை அதிக இடங்கள் வேண்டுமாம். அதே போல் எம்.எல்.ஏ.க்கள் சீட்டும் அதிகம் வேண்டுமாம் பொது தேர்தலில்.
நடவடிக்கை பாயும்
இதற்கு சம்மதிக்காத பட்சத்தில் ‘தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.' அப்படின்னு அமித்ஷா சொன்னதாக எங்களின் தலைமையோட கவனத்துக்கு தகவலை சொல்லியிருக்குது தமிழக பா.ஜ.க. அமித்ஷாவை எதிர்த்துக்கிட்டு எந்த முடிவும் எடுக்கும் சூழலில் நாங்க இல்லை. ஆக இது எங்கள் தலைமைக்கு வைக்கப்பட்ட டபுள் செக் தான். எந்த மாற்றமும் இல்லாமல் இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்து ஏகபோக மெஜாரிட்டியுடன் ஸ்டாலின் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. தள்ளியிருந்து வாழ்த்து சொல்ல வேண்டிதான்." என்று முடித்தனர் வெறுப்பாக.
அடக்கொடுமையே!
- ஜி.தாமிரா