எம்ஜிஆர் பார்முலாவை எடுத்து.. அதிமுக கையில் கொடுத்த பாஜக.. கூட்டிகழிச்சு பாருங்க சரியா வரும்!
தொகுதி பங்கீடு குறித்து எம்ஜிஆர் பாணியை பாஜக கையில் எடுத்துள்ளது.
சென்னை: எம்ஜிஆருக்கும் பியூஷ் கோயலுக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கா? ஆனால் இப்போது சம்பந்தப்பட்டு வருகிறது. ஆம்! எம்ஜிஆரின் அரசியல் பாணியைதான் இப்போது பியூஷ் கோயல் கையில் எடுத்திருக்கிறார்!
ஆட்சியில் இருந்தவரை, தன் கடைசி நாள் வரை தன் செல்வாக்கை கடைப்பிடித்தவர் எம்ஜிஆர். ஆளும் தரப்பு என்பதையும் ஆளும் கட்சி என்பதையும் தனித்தனியாக பிரித்து பார்ப்பவர். அதாவது எம்பி தேர்தல் சட்டமன்ற தேர்தலை சரியான வியூகம் அமைத்து போட்டியிட்டவர் எம்ஜிஆர்.
இன்னும் சுருக்கமாக சொல்ல போனால், எம்பி தேர்தலில் கூட்டணி சேரும் தேசிய கட்சிக்கு தொகுதிப் பங்கீட்டில் தாராளம் காட்டுவார், இதே சட்டமன்ற தேர்தல் என்றால் தனக்குப் போகத்தான் மற்றவர்களுக்குக் கொடுப்பார்.
பணிவதா?
அந்தந்த தேர்தலின் முக்கியத்துவம் கருதியே எம்ஜிஆர் இந்த ஃபார்முலாவை கடைப்பிடித்தார். அதனால்தான் மத்தியிலும் அவர் செல்வாக்குடன் இருக்க முடிந்தது. மாநிலத்திலும் தனது பிடியை உறுதியாக வைக்க முடிந்தது. இதற்கு அர்த்தம் மத்திய அரசுக்கு பணிவதோ, அல்லது தாரை வார்ப்பது அல்ல.
உடைத்தெறிந்தார்
இதையடுத்து வந்த ஜெயலலிதாவோ, இந்த ஃபார்முலாவை உடைத்தெறிந்தார். எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, அவர் தருவதுதான் சீட், அவர் ஒதுக்குவதுதான் தொகுதி. தன் கைப்பிடியிலேயே அனைத்தையும் வைத்திருந்தார். எம்பி தேர்தல், சட்டமன்ற தேர்தல் எதுவானாலும் ஜெயலலிதாவுக்கு ஒன்றுதான். தேவைப்பட்டால் கூட்டணி வைப்பார், தேவையில்லை என்றால் தனித்தே நிற்பார். அதில் வெற்றியும் பெறுவார். இந்த "தில்" ஜெயலலிதாவை மேலும் உச்சாணியில் தூக்கி உட்கார வைத்தது.
தனித்து நிற்கலாமே?
ஆனால் ஜெயலலிதா இல்லாத நிலையில் இன்று அதிமுக தேர்தலை எதிர்கொள்கிறது. ஜெயலலிதாவை போல தனித்து நிற்கலாமே, பாஜகவை உள்ளே விட்டால் நமக்கு ஒரு லாபமும் இல்லையே? நம்முடன் கூட்டணி சேர்ந்தால் அதன்மூலம் லாபமடைவது பாஜகதான் என்று சில மூத்த அதிமுக தலைவர்கள் தலைமையிடம் எடுத்து சொன்னார்கள்.
பியூஷ்கோயல்
ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் தமிழகத்தில் அமையவில்லை. இதை பற்றி யோசித்து வரும் நேரத்தில்தான், ஒற்றை இலக்கத்தில் குறிப்பாக பாஜக செல்வாக்கு உள்ள இடங்களில் மட்டும் சீட் தரலாம், என அதிமுக முடிவு செய்தது. ஆனால் இதனை உடைத்தெறிந்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்தவர் பியூஷ் கோயல்தான்.
தமிழக பிரச்சனை
அப்போது எம்ஜிஆர் ஃபார்முலாவை அதிமுகவிடம் எடுத்து சொல்லி இருக்கிறார். "இந்த தேர்தல் எங்களுக்கு முக்கியமானது, அதிக தொகுதிகளை ஒதுக்கினால் டெல்லியில் எங்களால் தமிழக பிரச்சனைகளை பேச முடியும். தீர்க்க முடியும்.
எம்ஜிஆர் பாணி
உங்களுக்கும் பலம் இருக்கும், அதேபோல சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு குறைவான சீட் தந்தால் போதும், அதை நாங்கள் ஏற்கிறோம்" என்று விவரித்திருக்கிறார். இந்த யோசனையை அதிமுகவும் பரிசீலிப்பதாகவே கூறப்படுகிறது. அதாவது பழைய எம்ஜிஆர் பார்முலாவை எடுத்து அதிமுக கையில் கொடுத்து யோசிங்க என்று பாஜக கூறியிருக்கிறது.. இதெப்படி இருக்கு...!