திமுக வீசிய திடீர் வலை.. சிக்கியது கொழுத்த மீன்.. அறிவாலயத்துக்கு "இவர்"தான் தாவி வர போறாராமே?
நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைகிறார் என்ற தகவல் கசிந்து வருகிறது
சென்னை: விரைவில் பாஜகவின் முக்கிய தலைவர் நயினார் நாகேந்திரன் திமுகவில் சேர போகிறாராம்.. இப்படி ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் அறிவாலயத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.
அதிமுகவின் முக்கிய அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன், அதிருப்தி காரணமாக அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.. எடுத்த எடுப்பிலேயே துணைத்தலைவர் பதவியை தந்தது பாஜக.. அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலிலும் சீட் கொடுத்து இவரை உயர்த்தியது.
ஆனால் நயினாருக்கோ, மாநில தலைமை பதவி காலியாக இருந்தபோது, அதன் மீது ஒரு கண் இருந்தது.. இன்னும் சொல்ல போனால், இதில், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டியே இருந்தது.. ஆனால், யாருமே எதிர்பாராமல் திடீரென முருகன் வந்துவிட்டார்.
அவரா, இவரா.. இல்லாட்டி "அவங்களா".. குழப்பத்தில் அதிமுக கோட்டை.. அதிர்ச்சியில் புலம்பும் தொண்டர்கள்!
மாற்றம்
இது அவரை அதிருப்திக்கு உள்ளாக்கியது.. இதற்கு பிறகு நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பெரிய பொறுப்பு அதாவது பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. இந்த சமயத்தில்தான், திமுகவின் சீனியர் தலைவர் விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார்... இணைந்தவர் சும்மா இல்லாமல், திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கு வலைவிரிக்க ஆரம்பித்தார்.
அதிருப்தி
இதை பார்த்த திமுக தலைமையோ, பாஜகவில் உள்ள அதிருப்திகளுக்கு வலையை விரித்தது.. அதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதரத்தினம் உட்பட பலரும் தன் பக்கம் இழுத்தது... இதுபோலவே நயினாரையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக இறங்கியது.
எல்.முருகன்
ஆனால் விஷயத்தை கேள்விப்பட்ட எல்.முருகன், திருநெல்வேலியிலுள்ள அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பேசியிருக்கிறார்.. அங்கேயே மதிய உணவும் சாப்பிட்டு, நயினாரை சமாதானமும் செய்தாராம்.. இதற்கு பிறகு திமுகவில் நயினார் இணைவதாக கசிந்த தகவல் பொய்த்து போனது.
உதயகுமார்
இதற்கு நடுவில், அதிமுகவும் நயினாருக்கு வலை வீசியது.. "நயினார் நாகேந்திரன் அதிமுகவில் மீண்டும் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள்... அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள்... அவர அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று அமைச்சர் உதயகுமார் ஒருமுறை சொல்லி இருந்தார்.
எடப்பாடியார்
இந்த விஷயத்தில் ஒரு படிமேலே போய் முதலமைச்சரே நயினாருக்கு அழைப்பு விடுத்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.. மறுபடியும் கட்சிக்கு திரும்பி வந்தால் அதிமுகவில் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம் என்றார் எடப்பாடியார்.. எடப்பாடியார் ஏன் அப்படி சொன்னார்? ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு, மாற்று கட்சியில் உள்ளவரை முதல்வரே அழைக்கிறார் என்றால் என்ன காரணம்? இதனால் கூட்டணிக்குள் மேலும் விரிசல் வராதா? என்ற சந்தேகங்கள் அப்போது எழவே செய்தன.
சித்தாந்தம்
இந்நிலையில், இன்று நயினார் அளித்த பேட்டியில் இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.. "பாஜகவும், அதிமுகவும் வெவ்வேறான கட்சிகள் அல்ல... இரண்டும் வேறு கட்சிகள் என்றெல்லாம் சொல்லவும் முடியாது... ரெண்டும் ஒரே சித்தாந்தம்தான்.. பாஜகவும் அண்ணா திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள். இந்த கட்சிகளின் கூட்டணியை பிரிக்கவும் முடியாது" என்றார்.
அணி தாவல்
இவ்வளவு தெள்ளத் தெளிவாக நயினார் சொன்னாலும், சில தினங்களாக அமுங்கி கிடந்த விஷயம் அணி தாவல் என்ற விஷயம் இன்னும் முழுசாக அடங்கவில்லையாம்.. திமுகவில் நயினார் நாகேந்திரன் இணைவதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அதற்கான தகவல் ஓரிரு நாளில் வந்தாலும் வரும் என்கிறார்கள்.. நயினார் பாஜகவை விட்டு செல்கிறாரோ இல்லையா, பாஜக நயினாரை கழட்டிவிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறது கூடுதல் தகவலாக உள்ளது.
அதிமுக
அதேபோல, ஓபிஎஸ் - ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர் விவகாரம் சூடு பிடித்து வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில அதிமுக அதிருப்திகளை இழுக்க திமுக தூண்டில் போட்டுள்ளதாம்.. இதேபாணியைதான் பாஜகவும் மறைமுகமாக கையில் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அதிருப்தி சீனியர்கள் எல்லாம் வேறு கட்சியில் ஜுனியர்களாக மாறும் நிலை உருவாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!