முதல்நாள் வந்த ஜே.பி நட்டா.. மறுநாளே ஸ்டாலினிடம் தூது போன அரசகுமார்.. பாஜகவின் திட்டம் என்ன?
Recommended Video
சென்னை: பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டாவின் தமிழக வருகைக்கு பின் தமிழக பாஜகவில் நிறைய மாற்றங்கள், குழப்பங்கள் நிலவி வருவதாக தகவல்கள் வருகிறது.
பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டா கடந்த நவம்பர் 30ம் தேதி தமிழகம் வந்தார். தமிழகம் வந்த அவருக்கு யானை அலங்காரம், செண்டை மேளம் என்று மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாஜக தொண்டர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதன்பின் சென்னையில் ஜே.பி நட்டா, தமிழகத்தின் மூத்த பாஜக உறுப்பினர்கள், தலைவர்களுடன் ஆலோசனை செய்தார். உள்ளாட்சி தேர்தல் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர்.
பிரச்சனை
பாஜகவில் தற்போது தலைவர்கள் வெவ்வேறு பிரிவுகளாக விலகி வேலை பார்க்கிறார்கள். கட்சியில் தலைவர் இல்லை என்பதால் கட்சியில் பலர் தங்கள் மனதிற்கு இஷ்டப்படி வேலை பார்க்கிறார்கள் என்று ஜே.பி நட்டாவிற்கு புகார் சென்றுள்ளது. இது தொடர்பாக ஜே.பி நட்டா கடும் கேள்விகளை எழுப்பினார்.
கோபமாக பேசினார்
கட்சிக்குள் சிலர் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கேள்விப்படுகிறேன். அவர்கள் கட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று ஜே.பி நட்டா தனது கூட்டத்தில் பேசினார். இந்த நிலையில் அவரின் தமிழக பயணத்திற்கு மறுநாளே பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் பெரும் சர்ச்சை பேச்சை பேசி உள்ளார்.
என்ன சொன்னார்
நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் பேசிய பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார், கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், அவர் அப்போது அப்படி எல்லாம் செய்யவில்லை. அவர் விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை. அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.
மோசம்
தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும் என்று குறிப்பிட்டார். இவரின் இந்த பேச்சுக்கு ஜே.பி நட்டாவின் தமிழக பயணத்திற்கும் ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எதிர்ப்பு
தமிழக பாஜக உறுப்பினர்கள் பலர் அரசகுமாரின் இந்த பேச்சை எதிர்த்துள்ளனர். அதே சமயம் பாஜகவின் தலைமைக்கு தெரிந்துதான் அவர் இப்படி பேசினார். மூத்த தலைவர் ஒருவர் இப்படி பேசுவதற்கு பின் கண்டிப்பாக ஏதாவது ஒரு திட்டமோ, காரணமோ இருக்கலாம் என்று பாஜக தொண்டர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
திமுக வலிமை
தமிழகத்தில் திமுக மிகவும் வலிமையான கட்சியாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயலலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் திமுக பாஜகவுடன் கொஞ்சம் கூட நெருக்கம் காட்டவில்லை.
பேசினார்
தமிழகத்தில் புதிய கூட்டணிக்கான திட்டங்களை ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார். இதனால்தான் அரசகுமார் ஸ்டாலினை புகழ்ந்து அவருக்கு தூது விட்டனர், அவரின் பேச்சுக்கு பின் இதுதான் காரணம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஜே.பி நட்டாவிற்கு அதிமுகவின் செயல்பாடு பிடித்துள்ளது. இன்னும் சில வருடங்களுக்கு கண்டிப்பாக பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்றும் கூறுகிறார்கள்.