சபாஷ்.. பாஜகவும் வளர்கிறதே.. முருகன் லீலைகள் செம.. அடுத்தடுத்து சிக்கும் தலைகள்.. மிரளும் கட்சிகள்
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அதிகமாகி வருகிறது
சென்னை: எல்.முருகனுக்கு ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும் என்ற பரவலான கருத்து எழுந்து வருகிறது.. அதே சமயம், பாஜகவின் வெற்றி திரண்டு வரும் பிரபலங்களை வைத்து முடிவு செய்ய முடியாது என்ற ஆணித்தரமான கருத்தும் மக்களிடம் உருவாகி உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த வியூகங்களில் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன.. இதில் எல்லாருக்கும் முன்னாடியே களத்தில் குதித்தது பாஜகதான்!
இதில், எல்.முருகன்தான் 60 சீட்டுக்கான அஸ்திவார வலையை அதிமுக பக்கம் வீசியவர்.. இந்த முறை ஓரளவுக்காகவது தமிழகத்தில் வாக்குவங்கியை பலப்படுத்த அக்கட்சி பல திட்டங்களை கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக, முருகன் மாநில தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகுதான் பாஜகவின் நடவடிக்கைகள் துரிதமாயின என்று ஒரு பேச்சும் எழுந்துள்ளது.
ஆமா, எல். முருகன் எதற்காக விழுந்தடித்து கொண்டு போய் முதல்வரை சந்திக்கணும்?
கூட்டணி
இது ஓரளவு உண்மையும்கூட.. கூட்டணியில் ஒரு கட்சி இந்த அளவுக்கு அசுர வேகத்துடன் செயல்படுவது இதுதான் முதல்முறை.. முருகன் பதவி ஏற்றபிறகு, நிறைய மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்... அவர்கள் ரவுடிகளாக இருந்தாலும் சரி, கையில் அரிவாளுடன் கட்சியில் சேரும் அளவுக்கு பாஜகவின் ஈர்ப்புத்தன்மை உள்ளது.. அதேபோலவே பிரபலங்களும் பாஜகவையே குறி வைத்து வருகிற்னர்.
பிரச்சாரம்
முன்பெல்லாம் நடிகர், நடிகைகள் தேர்தல் சமயத்தின்போது, அதிமுக பக்கம் அதிகமாக வந்திணைவார்கள்.. அதற்கு காரணம், யார் வந்தாலும் அவர்களை ஜெயலலிதா மிக சரியாக பயன்படுத்தி கொள்வார்.. இப்போது பாஜக அதுபோல் உருமாறி வருகிறது.. திமுகவை சேர்ந்த விபி துரைசாமி, குக செல்வம் என்ற மலை போன்ற பிரமுகர்களை முருகனால் தன் பக்கம் இழுக்க முடிந்திருக்கிறது.
அண்ணாமலை
அதேசமயம், ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் என அதிகாரிகளையும் பாஜகவில் இணைக்க வைக்க முடிகிறது. திடமாக இருந்த குஷ்புவும் பாஜகவில் இணைந்துவிட்டார். அந்த வகையில், திராவிட கட்சிகள் செய்யாததை முருகன் மிக குறுகிய காலத்தில் செய்துள்ளார்.. அதனால் அவருக்கு ஒரு சபாஷ் போடவே செய்யலாம்.
பாஜக
அதேசமயம், கட்சிக்குள் விஐபிக்களை இழுத்து வருவதால் மட்டுமே அந்த கட்சி பலம் பெற்றுவிடுமா என்பது சந்தேகம்தான்.. காரணம், குஷ்புவையே உதாரணமாக எடுத்து கொண்டால், அவருக்கென்று ஓட்டு வங்கி கிடையாது.. அவர் கூட்டத்தில் பேசினால், அது மீடியா மூலம் மக்களை வெகு எளிதாக சென்றடையும்.. அவ்வளவுதான்.. மற்றபடி கட்சிக்கு வலு சேர்க்காது.. அப்படி பார்த்தால், ஏற்கனவே ராதாரவி, எஸ்வி சேகர் போன்றோர் இருந்தும், ஏன் பாஜக தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற முடியவில்லை என்ற கேள்வி எழவே செய்யும்.
தமிழக மக்கள்
அதனால், கும்பல் கும்பலாக பலர் பாஜகவில் சேர்ந்துவிடுவதாலோ, அல்லது வலிமையானவர்களை தங்கள் பக்கம் இழுத்துவிடுவதாலோ, தமிழகத்தில் தாமரை மலராது.. மாறாக, ஒரு கட்சி மக்களுக்கு எந்த அளவுக்கு நல்லது செய்கின்றன என்பதிலேயே வீரியம் அடங்கி உள்ளது.. இதுவரை தமிழக பாஜக மக்கள் பக்கம் நின்றது கிடையாது. மத்திய அரசு கொண்டு வரும், தமிழகத்துக்கு எதிரான எந்த திட்டங்களுக்கும் மறுப்பும், கண்டனத்தையும் சொன்னது கிடையாது.. விலைவாசி உயர்வு முதல் எந்த விஷயத்திலும் அடித்தட்டு மக்கள் பக்கம் நின்றது கிடையாது.
சமூக வளர்ச்சி
இப்படி மக்களுடன் இணக்கமாக இல்லாமல், தன் கட்சி வளர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையிலேயே ஈடுபட்டு வருவது எந்த வகையிலும் பலன் தராது. வேலை வாய்ப்புகள், சமூக வளர்ச்சி, கல்வி மேம்பாடு, பிற்பட்டோர் நலன், மருத்துவ மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி என்ற ஒரு சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை முன்னிறுத்தி இதுவரை பாஜக எதையுமே செய்தது கிடையாது.. அதற்கான முக்கியத்துவத்தை தந்து போராடியதும் கிடையாது.
நட்சத்திரங்கள்
அதுமட்டுமல்ல மோடி என்ற பெரிய பிம்பத்திற்கே கிடைக்காத ஓட்டு இந்த சினிமா கவர்ச்சி பிரபலங்களால் கிடைக்காது.. எந்த புதிய மாற்றத்தையும் இது ஏற்படுத்தாது.. பாஜக தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒரு கட்சி என்பது தான் தமிழர்களுடைய நிலைப்பாடாக உள்ள நிலையில், அதற்கான காரியத்தில்தான் அக்கட்சி கவனம் செலுத்த வேண்டும்.. மற்றபடி எத்தனை நட்சத்திரங்கள் அக்கட்சியில் சேர்ந்தாலும், அது அப்போதைக்கு மின்னி மறையும் நட்சத்திரங்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள்!