Exclusive: நான் யாரையும் எதிரியாக பார்க்கும் ஆள் இல்லை... காயத்ரி ரகுராம் 'பளிச்' பேட்டி
சென்னை: பாரதிய ஜனதாவில் பதவி கொடுக்குமாறு தாம் கேட்டதுமில்லை, கேட்கப்போவதுமில்லை என கூறுகிறார் காயத்ரி ரகுராம். மேலும், பொதுவாக தாம் யாரையும் எதிரியாக பார்க்கும் ஆள் இல்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் தன்னை குறிவைத்து சீண்டி வருவதாகவும் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: டெல்லியை பொறுத்தவரை பாஜகவுக்கு பின்னடைவே இல்லை. இதை முன்னேற்றம் என்று தான் சொல்லவேண்டும், ஏனென்றால் கடந்த முறை 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். இப்போது 7 தொகுதிகள் வரை வெற்றிபெற்றிருக்கிறோம். பெரும்பாலான தொகுதிகளில் சில நூறு ஓட்டு வித்தியாசத்தில் தான் பாஜக வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். அதனால் என்னை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவை பாசிட்டிவாக தான் பார்க்கிறேன்.
கேள்வி: பாஜகவுக்காக ட்வீட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகிறீர்கள்.. ஆனால் கட்சியில் உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே?
பதில்: பாஜக இளைஞரணியில் எக்ஸ்கியூட்டிவ் மெம்பராக இருந்து வருகிறேன். தமிழக பாஜகவில் பொறுப்புகொடுங்கள் என நானாக சென்று கேட்டதுமில்லை, கேட்கப்போவதுமில்லை. ஆனால் எனக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்தால் அதை ஏற்றுக்கொண்டு நிச்சயம் உழைக்கத் தயாராக இருக்கிறேன். எதை செய்தால் சரியாக இருக்கும் என்று, தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை சினிமாவிலும் கூட நடிக்க சான்ஸ் வேண்டும் என நான் கேட்டதில்லை.
கேள்வி: நெய்வேலியில் விஜய்க்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தியது சரியா? ஐடி ரெய்டுக்கு கூட பாஜக தான் காரணம் என கூறப்படுகிறதே?
பதில்: வருமானவரி சோதனைக்கும் அரசியல் கட்சிக்கும் எப்படி தொடர்பு இருக்கும். படித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும், படிப்பறிவில்லாத சிலர் தான் இப்படி கட்டுக்கதைகளை ஜோடித்து பரப்பி வருகின்றனர். விஜய் சார் வீட்டில் ஐடி ரெய்டு நடத்துங்கள் எனக் கூறுவது தான் மத்திய அரசுக்கு வேலையா, வேறு வேலையே இல்லையா. நெய்வேலியில் என்.எல்.சி.அருகில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் பட்டாசு வெடித்ததை கண்டித்து பாஜகவினர் கேள்வி கேட்டனர். மீண்டும் சொல்கிறேன் விஜய் சார் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் பாஜகவுக்கும் துளியும் தொடர்பில்லை.
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை..? பிரச்சனை எங்கே தொடங்கியது?
பதில்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சீண்டி வருகின்றனர். சேரி என்ற வார்த்தை சோழர் காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட ஒன்று. அனைவரும் சேர்ந்து வசிக்கக்கூடிய ஒரு பகுதி தான் அது. இதை பூதாகரமாக்கி ஏதோ தவறான வார்த்தையை நான் பேசிவிட்டதாக சித்தரித்தது எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் திருமாவளவன். அவிழ்த்துபோட்டு நடிக்கும் நடிகை என வி.சி.கவினர் என்னை தரம்தாழ்ந்து விமர்சித்தனர். அதை திருமாவளவன் தடுக்கவில்லை. தொடர்ந்து இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் அவர் பேசிவருவார், அதை எப்படி நான் எதிர்க்காமல் இருக்க முடியும். கடவுளை பொறுத்தவரை எனக்கு தாய், தந்தையை போல். அதை ஒருவர் அநாகரீகமாக விமர்சித்தால் நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. இப்படியெல்லாம் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் யாரையும் எதிரியாக பார்க்கும் ஆள் இல்லை. இப்போது திருமாவளவனை பார்த்தால் கூட ஒரு ஹாய் சொல்லிவிட்டு சென்றுவிடுவேன். ஆனால் அவர்கள் தான் என்னை தொடர்ந்து சீண்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
கேள்வி: சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் நீங்க அரசியலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறதே..?
பதில்: யார் சொன்னது எனக்கு சினிமாவில் வாய்ப்பில்லை என்று. இப்போதும் கூட நிறைய படங்கள், வெப் சீரிஸில் கமிட் ஆகியிருக்கிறேன். இதெல்லாம் வேலைவெட்டி இல்லாதவர்கள் பரப்பும் பொய்க்கதை. லைம்லைட்டில் இருப்பவர்களை பார்த்து ஏதாவது சொன்னால் நாமும் வெளிச்சத்திற்கு வரலாம் என்ற ஆசையில் இப்படி சிலர் கூறுவதுண்டு. அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
கேள்வி: எம்.பி., எம்.எல்.ஏ. ஆகும் ஆசைகள் இருக்கிறதா உங்களுக்கு?
பதில்: அரசியலுக்கு வருவேன் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தந்தைக்கு அத்வானி மீது நல்ல அபிமானம் இருந்தது. இதனால் அவர் பாஜக சார்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை நான் கவனித்திருக்கிறேன். பின்னர் மோடியின் செயல்பாடுகள் என்னை ஈர்த்ததால் நானும் பாஜகவில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வந்ததே விபத்து என்கிற போது, எம்.பி., எம்.எல்.ஏ.வாக ஆகும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை. அது பற்றி ஒரு நாள் கூட நினைத்ததில்லை. சிறுவயதில் இருந்தே ஒரு நல்ல டான்ஸ் மாஸ்டராக வர வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
கேள்வி: தமிழக அரசை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..? செயல்பாடுகள் எப்படி உள்ளன?
பதில்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அனைவரும் எளிமையாக சந்தித்து பேச முடிகிறது. அவரது எளிமை அனைவரையும் கவர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கை காப்பதில் இன்னும் கொஞ்சம் கறாராக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கென்று இப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் கூறவில்லை. இப்போதும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் உள்ளது. இருப்பினும் அந்த விவகாரத்தில் மட்டும் முதல்வர் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும்.