எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா!
சென்னை: அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்து தானாகவே கவிழ்ந்தாலும் ஜனாதிபதி ஆட்சியை தொடரச் செய்து 2021-ல் தமிழக சட்டசபைக்கான தேர்தலை நடத்தும் முடிவில் இருக்கிறதாம் பாஜக.
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசை கவிழ்க்கும் முயற்சியில் திமுக தலைமையில் கிச்சன் கேபினட் ரொம்பவே ஆர்வம் காட்டியது. இது தொடர்பான பேரங்களும் கூட நடைபெற்றன.
திமுகவின் இந்த ஆபரேஷனுக்கு முதல்வர் தரப்பில் இருந்தும் செக் வைக்கப்பட்டது. ஆனாலும் திமுக தரப்பு பேரங்கள் தொடர்ந்தன. தற்போது ஆட்சி கவிழ்ப்பு ஆபரேஷனை திமுக தலைமை நிறுத்தி வைக்கவும் சொல்லி இருக்கிறதாம்.
திமுக கணக்கு
தற்போதைய ஆட்சி கவிழ்ந்து உடனே சட்டசபைக்கான தேர்தல் நடைபெற வேண்டும்; அப்போதுதான் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்ற முடியும் என நினைக்கிறது திமுக. இதை மனதில் வைத்துதான் பேரங்களை தொடங்கினார்.
பாஜகவின் ப்ளான்
ஆனால் பாஜகவோ வேறு ஒரு திட்டத்துடன் இருப்பதாக டெல்லி தகவல்கள் திமுக தலைமைக்கு தெரிவித்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியே கவிழ்ந்தாலும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு அரசியல் ஆட்டங்களைத்தான் பாஜக தொடங்குமே தவிர உடனே தேர்தல் நடத்தி திமுகவுக்கு வலிய ஆதாயத்தைத் தேடி தராது என்பதுதான் அந்த தகவல்கள்.
ரஜினியை களமிறக்கும் பாஜக
2021 வரை ஜனாதிபதி ஆட்சியை தொடர அனுமதித்துவிட்டு அதற்குள் திமுக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி அமைவதை முதலில் தடுக்கும் பாஜக. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தை திராவிட அரசியலுக்கு மாற்று என முன்னிறுத்தி பூதாகரமாக்கிக் காட்டுவது; பின்னர் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு போவது என்கிற திட்டங்களுடன் இருக்கிறதாம் பாஜக.
ரஜினியை வலிமைப்படுத்தி...
மேலும் அதிமுகவின் தற்போதைய இரட்டை தலைமையால் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து அக்கட்சி நிர்வாகிகளில் கணிசமானோர் கவலையில் உள்ளனர். அதேபோல் திமுகவின் வாரிசு அரசியலில் வெறுப்படைந்தவர்களும் உள்ளனர். இவர்களை அப்படியே ரஜினிகட்சியில் சேர்த்துவிடுவதன் மூலம் அவரை வலிமைமிக்க சக்தியாக உருவாக்க முடியும் என்பது பாஜகவின் திட்டம். இத்தனையும் நடைபெற வேண்டும் எனில் 2021 வரை காத்திருக்க வேண்டும் என கணக்குப் போட்டு வைத்திருக்கிறது பாஜக. இதை புரிந்து கொண்ட திமுகவும் ஆட்சி கவிழ்ப்பு ஆபரேஷனுக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லியிருக்கிறதாம்.