இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் கிடையாது... தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க -எல்.முருகன்
சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் முறை கிடையாது என்றும், மக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அதனை நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இ-பாஸ் முறைக்கு எதிராக மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்ப்பும், கோபமும் வலுத்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இ-பாஸ் இனித் தேவையில்லை எனக் கூறி வருகின்றனர்.
எஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்
எல்.முருகன் அறிக்கை
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் உள்ள நிலையில் பணி நிமித்தமாக மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் இ-பாஸ் கிடைக்காமல் அவர்கள் அவதியுறுவதாகவும் கூறியுள்ளார். மிக மிக அவசியமான தேவைகளுக்கு கூட பலருக்கும் இ-பாஸ் கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
போலி இ-பாஸ்
மேலும், ஒரு சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ-பாஸ் வழங்க முயற்சிப்பதும், போலி இ-பாஸ் தயாரித்து வழங்குவதும் ஆங்காங்கே நடைபெறுவதாகவும் எல்.முருகன் புகார் தெரிவித்துள்ளார். இ-பாஸ் நடைமுறையில் உள்ளதால் கணவன் மனைவி சந்திக்க முடியாத நிலை, பெற்றோர் பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
செய்தி வருகிறது
இ-பாஸ் நடைமுறையால் மக்களின் மனக்குமுறல்கள் தொடர்ந்து செய்தியாக வந்த வண்ணம் உள்ளது என்றும், மக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ் முறையை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தியாவில் மற்ற எந்த மாநிலங்களிலும் இ-பாஸ் கிடையாது என அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுக்கு கோரிக்கை
இதுவரை எதிர்க்கட்சிகள் மட்டுமே அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவரான எல்.முருகனே தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.