தமிழ் கடவுளை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்க - தமிழக பாஜக தலைவர் எல் முருகன்
கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து யூ-டியூப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்து கடவுளை அவமதித்து வீடியோ வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்து கடவுள் பற்றியும் விமர்சனங்கள் செய்து வீடியோ வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையானது.
கந்த சஷ்டி கவசம் குறித்த வீடியோ இந்துக்களிடையே மட்டுமின்றி, மதம் கடந்த தமிழர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்த யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்ட உடல் அங்கம், சங்க இலக்கியங்களிலும் அதே வார்த்தையோடு கூறப்பட்ட வார்த்தையை ஆபாசப்படுத்தி பேசுவது தமிழுக்கு எதிரானது என்ற விமர்சனங்களும் பெருகின. இதனையடுத்து கறுப்பர் கூட்டம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
தலித் விவசாயிகளை லத்தியால் அடிக்கும் போலீசார்...கதறும் குழந்தைகள்...மபி கொடூரம்!!
இதனிடையே தமிழக பாஜக தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரில் "கருப்பர் கூட்டம்" என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளதாகவும், முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் மிகவும் அருவெருக்க தக்க ஆபாசமாக, ஹிந்து மதத்தையும் அதன் கடவுள் முருகரையும் அசிங்கப்படுத்தி மேற்கண்ட சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், இந்துமத தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும். இது இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளதாகவும், மக்களின் மத்தியில் ஒருவித அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இருப்பதால், அதனை வெளியிட்ட சுரேந்திரன் நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்டையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலை தூண்டுவது, அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் அதன் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அவரவர் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று காலையில் பாஜகவினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக முழக்கமிடப்பட்டது. முருகன் படத்தை முன்பாக வைத்துக்கொண்டு யூடியூப் சேனல் உரிமையாளர்களையும், கந்த சஷ்டி கவசம் உள்பட இந்துக்கடவுளர்களை அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் ஆர்பாட்டம் நடத்தினர்.
கருப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகிகளை கண்டித்து தமிழ்நாடு பாஜக ஆர்ப்பாட்டம் ...
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) July 16, 2020
இன்று தமிழ்நாடு முழுவதும் எனது அறிவுறுத்தலின் பேரில் பாஜக நிர்வாகிகள் அனைவரும் தம்தம் வீடுகள்தோறும் அறப்போராட்டம் செய்தார்கள். pic.twitter.com/z3a6Em8TA5
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தனது இல்லத்தின் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முருகன், தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முருகனை இழிவுப்படுத்திய அந்த சேனலை தடை செய்ய வேண்டும். இதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேந்திர நடராஜன் உள்ளிட்டவர்களை தேச துரோக வழக்கு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.