20 எங்களுக்கு.. "15 அமமுகவுக்கு.." பாஜக வேற லெவல் பிளான்.. அதிமுக அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை, அதிமுக கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என்றும் பாஜக பகீரதப் பிரயத்தனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
நேற்று நிருபர்களுக்கு பாஜக தலைவர் முருகன் பேட்டி அளித்த போது, இதை கேள்வியாக முன்வைத்தனர். ஆனால் நழுவலாக பதில் சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார் முருகன்.
ஆனால் திரை மறைவில் அதற்கான காய்நகர்த்தல்கள் துரிதமாக நடைபெற்று வருவதாக பாஜக வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
ஹோட்டலில் ஆலோசனை
இதுபற்றி பாஜக வட்டாரத்தில் பேச்சு கொடுத்த போது சில தகவல்களை கூறினர். அவர்கள் கூறியதன் தொகுப்பு இதோ உங்களுக்காக: இரு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசினர். அப்போது சசிகலா விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி அமைக்க யோசனை
சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்வது, அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைப்பது ஆகிய அமித் ஷாவின் 2 யோசனைகளையும் எடப்பாடி ஏற்பதற்கு தயக்கம் தெரிவித்துள்ளார். சசிகலா உடன், அதிமுக தொடர்பை வைத்துக்கொண்டால் கட்சி இமேஜ் கெட்டுவிடும். மேலும் கட்சிக்கு என்று தனித்த இமேஜ் கடந்த இரண்டு வருடங்களில் மிகவும் அதிகரித்து விட்டது. எனவே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் கூட்டணி வேண்டாமே என்று சொல்லியுள்ளார் எடப்பாடியார்.
35 தொகுதிகள்
அதேநேரம் பாஜக தரப்பில் அதிமுகவிடம் இருந்து 50 தொகுதிகள் வரை கேட்கப்பட்டுள்ளது. எப்படியும் அதில் 35 தொகுதிகளுக்கு அதிமுக ஒப்புக்கொள்ளும் என்பது அமித் ஷா நம்பிக்கையாக இருக்கிறது. அவ்வாறு 35 தொகுதிகளை பெற்றுக்கொண்டு அதில் 20 தொகுதிகளில் பாஜகவுக்கும் 15 தொகுதிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கும் கொடுக்கலாம் என்று பாஜக தலைவர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர்.
நேரடி கூட்டணி கிடையாது
அதாவது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக ஆகியவற்றுடன் நேரடி கூட்டணி கிடையாது. பாஜக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தோடுதான் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.. எங்களது பங்கீட்டில் இருந்து 15 தொகுதிகளை டிடிவி தினகரன் கட்சிக்கு ஒதுக்குகிறோம்.. என்பது பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக இருக்கும். இதற்கு எப்படியாவது அதிமுக தலைமையை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உள் பங்கீடு
இவ்வாறு ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு உள் பங்கீடு செய்து கொள்வது தமிழக அரசியலில் புதிது கிடையாது. இந்த மாதிரி பாமக மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் இடையே உள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. கூட்டணி வைக்கப்படவில்லை. இப்போது, அதே பாணியை பின்பற்றலாமா என்று பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
அதிமுக யோசனை
இதன் காரணமாகத்தான் இன்னமும் தொகுதி பங்கீட்டில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எந்த வழியில் வந்தாலும் சரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை அதிமுக பக்கத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் எடப்பாடிபழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதுதான் இழுபறிக்கு காரணம் என்று சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டனர், அந்த பிரமுகர்கள்.