பேனரால் ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்வோமா?சூர்யாவின் நீட் அறிக்கை- பாஜக காயத்ரி ரகுராம் பதில்
சென்னை: பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடை செய்துவிட வேண்டுமா? என்று நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து மாண்டு போகின்றனர். தமிழகத்தில் சனிக்கிழமையன்று மட்டும் 3 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொன்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'நீட் மரணங்கள்' மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழை காணும் சாணக்கியர்கள்.. சூர்யா கொதிப்பு
சூர்யாவின் காட்டமான அறிக்கை
இது தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நீட் தேர்வுகளை மிக கடுமையாக சாடியிருந்தார் சூர்யா. நீட் தேர்வை, மனுநீதித் தேர்வு எனவும் விமர்சித்திருந்தார் சூர்யா. சூர்யாவின் அறிக்கை குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கோர்ட் அவமதிப்பு புகார்
மேலும் நீதித்துறையை சூர்யா இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியிருக்கிறார். இதுவும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காயத்ரி ரகுராம் பதில்
இதனிடையே சூர்யாவின் அறிக்கைக்கு பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம், ரசிகர்கள் பேனர்கள் வைக்கிறார்கள்.. பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்துவிட்டால் சினிமாவையே தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்போமா? எந்த ஒரு லாஜிக்குமே இல்லையே..
காயத்ரிக்கு ஆதரவு- எதிர்ப்பு
தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.. மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினந்தோறும் தேர்வு எழுவதைப் போலத்தான் என்று கூறியிருக்கிறார். காய்த்ரி ரகுராமின் இந்த பதிலுக்கு ஆதரவாக, எதிர்ப்பாக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.