சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டி? வேறு தொகுதியை தேர்வு செய்யும் உதயநிதி?
சென்னை: சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிட்டால் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வது பாதிக்கப்படும் என்பதால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேறு ஒரு தொகுதியை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த தேர்தலில் களம் காணுகிறார். முந்தைய சேப்பாக்கம், தற்போதைய சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதான் உதயநிதியின் முதல் சாய்ஸாக இருந்தது.
கருணாநிதி தொகுதி
சேப்பாக்கம் சட்டசபை தொகுதியாக இருந்த போது 7 முறை திமுக வெற்றி பெற்ற தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1996, 2001, 2006-ல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
திமுகவின் கோட்டை
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியான பின்னர் 2011, 2016-ல் திமுகவின் மறைந்த ஜெ. அன்பழகன் இருமுறை வென்ற தொகுதி. தாத்தா கருணாநிதியின் தொகுதி, திமுகவின் கோட்டை என்பதால் உதயநிதியின் முதல் தேர்வாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி இருக்கிறது.
பாஜக வேட்பாளர் குஷ்பு?
அதேநேரத்தில் பாஜகவின் நடிகை குஷ்பு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் இந்த முறை களம் காணக் கூடும் என தெரிகிறது. இத்தொகுதியில் பொறுப்பாளராக இருக்கும் குஷ்புவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி தொகுதி முழுவதும் கேட்டு வருகிறார். இதனால் இந்த தொகுதியில் குஷ்பு போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.
பிரசாரம் பாதிக்குமே..
அப்படி குஷ்பு போட்டியிட்டால் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டுமே உதயநிதி கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும். மேலும் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் போகும்.
10 முறை வென்ற திமுக
இதனால் உதயநிதியின் அடுத்த தேர்வாக துறைமுகம் சட்டசபை தொகுதி இருக்கிறது. இங்கு திமுக 10 முறை வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதி 2 முறையும், க. அன்பழகன் 3 முறையும் வெற்றி பெற்ற தொகுதி துறைமுகம். சிட்டிங் எம்.எல்.ஏ.வாக சேகர்பாபு இருக்கிறார். அவர் வசம் தொகுதி பொறுப்பை கொடுத்துவிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வது எளிதாக இருக்கும் என்பதும் உதயநிதி தரப்பின் கருத்தாம். இதேபோல் சென்னையில் திமுக அதிக முறை வெற்றி பெற்ற சில தொகுதிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறாராம் உதயநிதி.