சசிகலா- எடப்பாடியார்; மமதா- கங்குலி; நிதிஷ்- சிராக் பாஸ்வான். உள்ளூர் தலைகளை மோதவிடும் பாஜக பாணி
சென்னை: இந்திய அரசியல் வரலாற்றில் பாஜக கையில் எடுக்கும் அஸ்திரங்கள் அத்தனையும் அதிரிபுதிரியாகத்தான் இருக்கிறது.
Recommended Video
காங்கிரஸ் தேசத்தை ஆண்ட காலங்களில் பிடிக்காத எதிர்க்கட்சிகள் அரசு என்றால் தயவு தாட்சன்யமே இல்லாமல் 356-வது பிரிவை பயன்படுத்தி கலைத்துவிடும் போக்கு இருந்தது. உச்சநீதிமன்றம் தலையிட்ட பின்னர்தான் காங்கிரஸ் அரசுகள் வழிக்கு வந்தன.
கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, 356-வது பிரிவை பற்றி எல்லாம் பேசுவது கூட இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆட்சி கவிழ்ப்புகள் சர்வ சாதாரணமாகிவிடுகின்றன. மிகப் பெரிய மாநிலமான மத்திய பிரதேசமாக இருந்தாலும் குட்டி யூனியன் பிரதேசமான புதுச்சேரியாக இருந்தாலும் சரி ஒரே பார்முலாதான் பாஜகவுக்கு.
ராஜினாமாவும் ஆட்சி கவிழ்ப்பும்
ஆட்சியை கவிழ்க்க வேண்டிய எண்ணிக்கைக்குரிய எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பது.. அப்புறம் என்ன நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்.. ஆட்சிகள் தானாக கவிழும். இப்படி ஒரு டெக்னிக்கைதான் பாஜக இடைவிடாமல் பயன்படுத்துகிறது. இன்னொன்று கூட்டணி வைக்கும் கட்சிகளை ஒழித்துவிட்டு அந்த கட்சியின் இடத்தை கபளீகரம் செய்வது என்பது.
பீகாரில் நிதிஷ்- சிராக் மோதல்
இந்த பாஜகவின் வியூகங்களில் தாம் ஆதாயம் அடைவதற்காக உள்ளூர் தலைகளை மோதவிடுவது என்பதும் ஒன்று. பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூவுடன் கூட்டணி அமைத்தது பாஜக. இன்னொரு பக்கம் பாஜக- லோக் ஜனசக்தியின் சிராக் பாஸ்வான் என தனிகூட்டணி. கூட்டணி கட்சியான ஜேடியூ போட்டியிட்ட இடங்களில் சிராக் பாஸ்வான் கட்சி போட்டியிட்டு ஜேடியூவையே ஒழித்து கட்டிவிட்டு 2-வது இடத்துக்கு முன்னேறியது பாஜக.
சசிகலா- எடப்பாடியார்
இதே பார்முலாவைத்தான் தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களில் கைகளில் எடுத்திருக்கிறது பாஜக. எந்த சசிகலா முதல்வராகிவிடக் கூடாது ; எந்த தினகரன் கையில் அதிமுக போகக் கூடாது என பாஜக நினைத்ததோ அதே சசிகலாவும் தினகரனும் இன்று பாஜகவுக்கு நட்பு சக்திகளாகிவிட்டனர். பாஜகவை நம்பி சசிகலாவை கடுமையாக எதிர்த்த எடப்பாடியார் இப்போது கை பிசைந்து கொண்டிருக்கிறார். பீகார் பாணியிலேயே கூட்டணிக்குள் உள்ஒதுக்கீடு, தனி ஒதுக்கீடு பார்முலா பேசுகிறது பாஜக. இப்போது சசிகலாவையும் எடப்பாடியாரையும் மோதவிட்டு பக்கத்தில் நின்றே ரசிக்கிறது பாஜக.
மமதா- கங்குலி
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு முதல்வர் வேட்பாளர் என்கிற முகம் இல்லை. இப்போதைய பாஜகவில் பெரும்பாலான தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸி்ல் இருந்து வெளியேறியவர்கள். அதாவது ஜூனியர் திரிணாமுல் காங்கிரஸாகவே மேற்கு வங்க பாஜக இருந்து வருகிறது.
பாஜகவில் கங்குலி?
இதனால் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தேர்வு செய்திருக்கிறது பாஜக. அதாவது வங்காளி பெருமிதம் பேசும் மமதா பானர்ஜியை எதிர்க்க வங்காளியான சவுரவ் கங்குலிதான் சரியான தேர்வு என்பது பாஜக கருத்து. ஆனால் கங்குலியோ இந்த அக்கப்போருக்குள் சிக்காமல் இருந்து வருகிறார் கங்குலி. ஆனாலும் ரஜினிகாந்த் போல அவரை விட்டுவிடக் கூடாது என நினைக்கிறது. அனேகமாக பாஜக ஜோதியில் கங்குலி ஐக்கியமாகலாம். பாஜகவின் இந்த புதிய 'ஆடு' களத்தில் அடுத்து சிக்கப் போவது யாரோ?