பாஜக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்.. திமுக தரப்பில் கிளம்பும் கிலி.. இமேஜ் டேமேஜாகுமா?
சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை பாஜக அமைத்து வருகிறது
சென்னை: பாஜக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், மாற்று கட்சிகளுக்கு கிலியையும், கலக்கத்தையும் தந்து வருகிறது. இப்போது அக்கட்சியின் கவனம் முழுக்க திமுக பக்கம் திரும்ப போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
மோடியின் முதல் ஆட்சியில் இருந்தே ஊழலுக்கு எதிரான போக்கு என்பதை வலியுறுத்தி வருகிறது. இப்போதைய 2-வது முறை ஆட்சியில் ஊழலுக்கு எதிரான செயலை கையில் எடுத்து வருகிறது.
அதன்படி, ஊழல் செய்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைதாகி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் கட்டம் கட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தர்பார் படத்திற்கு விளம்பரம் கிடைச்சிடுச்சு.. ரஜினி திடீர் மனமாற்றம்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
எச்.ராஜா
ஊழல்வாதிகள் சிறை செல்வார்கள் என்று தமிழகத்தில் இதை அடிக்கடி சொல்லி வந்தது எச்.ராஜாதான். கனிமொழி, ஆ.ராசா, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் போன்றோரின் பெயர்களை எச்.ராஜா அடிக்கடி சொன்னதுடன், சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடியில் திரும்பவும் எம்பி தேர்தல் வரும் என்றும் அப்போதே சொன்னார். இதையடுத்துதான் ப.சிதம்பரம் கைது நடந்து முடிந்தது.
யூகங்கள்
சில தினங்களுக்கு முன்புகூட "இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ஊழல் செய்திருக்கிறார்... அவர் தான் அடுத்த கைது" என்று ஒரு பேட்டியில் எச்.ராஜா கூறியிருந்தார். இதையடுத்து அந்த நபர் யாராக இருக்ககூடும் என்றும், கண்டிப்பாக அது திமுக அல்லது கூட்டணி கட்சி சம்பந்தப்பட்டவராக இருக்கக்கூடும் என்றும் கருத்துக்கள், யூகங்கள் பலமாக எழுந்தன.
அரசியல்வாதி
இந்த சமயத்தில், பாஜகவின் செய்தி தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா, ராமேஸ்வரம் கோயிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "இந்தியா முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் தொடர்பு உள்ளவர்கள். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ப.சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும் விரைவில் கைது செய்யப்படுவார்'' என்று சொன்னார்.
யார் அவர்?
பாஜகவின் முக்கிய புள்ளியே இப்படி சொல்லி உள்ளது தமிழக அரசியல் பெரிய பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது. அந்த அரசியல்வாதி யார் என்ற சலசலப்பு தற்போது எழுந்துள்ளது. திமுக தரப்புக்கு பாஜக குறி வைத்திருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். திமுகவின் இமேஜை டேமேஜ் செய்ய அக்கட்சி எம்பிக்களின் பழைய புகார்கள், ஊழல்கள், குற்றச்சாட்டுகள் குறித்த ரிப்போர்ட்களை ரெடி செய்து தருமாறு பாஜக தலைமை கேட்டதாகவும் தகவல்களும் வந்தன.
கனிமொழி
குறிப்பாக, 2ஜி விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில், ஆ.ராசா, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த நிலையில், இதனை துரிதப்படுத்தும் வேலையில் பாஜக இறங்க உள்ளதாம். அதேபோல, சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தையும் கிண்டி எடுத்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமித்ஷா-மோடி என்ற இரட்டை ஜாம்பவான்களின் அடுத்த குறி திமுகவாக இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளதால், அக்கட்சி திரும்பவும் கலக்கத்தில் உள்ளதாக சலசலக்கப்படுகிறது.