40 தொகுதிகள்....அதுவும் கொங்கு மண்டலத்தில் கணிசமான இடங்களாம்.. அதிமுகவுக்கு நெருக்கடி தரும் பாஜக
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். அத்துடன் லோக்சபா தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணியே தொடரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுகவிடம் 40 சீட்
இதனால் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளும் அதிமுக அணியில் இடம்பெறும் என தெரிகிறது. இதனிடையே அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக கேட்டு வருகிறதாம்.
கொங்கு மண்டல சீட்டுகள்
அதிலும் அதிமுக வலிமையாக உள்ள கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை பாஜக கேட்கிறதாம். ஆனால் கொங்கு மண்டல தொகுதிகளை பாஜகவுக்கு தாரை வார்த்து கொடுப்பதில் அதிமுகவுக்கு துளியும் விருப்பம் இல்லையாம்.
ஜெயிக்கிற தொகுதிகள்தான்..
இதனால் காவிரி டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் தொகுதிகளை ஒதுக்குகிறோம் என்கிறதாம் அதிமுக. ஆனால் எளிதாக வெற்றி பெறக் கூடிய தொகுதிகளை எங்களுக்கு முதலில் ஒதுக்கிவிடுங்க.. அதில் ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு என கறார் காட்டுகிறதாம் பாஜக.
அதிமுக ஆதங்கம்..
பாஜகவின் இந்த உஷாரான பேரம் அதிமுகவை ரொம்பவே உஷ்ணப்படுத்துகிறதாம். பிற மாநிலங்களில் மாநில கட்சிகளை அரவணைத்து அழித்த அதே பார்முலாவை இவ்வளவு இறங்கி போன நம்மிடமே காட்டுகிறதே பாஜக என்கிற ஆதங்கத்தையும் அதிமுக தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனராம்.