''திமுக சங்கரமடமான்னு அன்னைக்கு கருணாநிதி கேட்டாரே.. இப்போ அது "கருணாநிதி மடம்".. எச். ராஜா பொளேர்!
கருணாநிதியின் சங்கரமடம் என்று திமுகவை விமர்சித்துள்ளார் எச்.ராஜா
சென்னை: ''திமுக என்ன சங்கரமடமா?ன்னு அன்னைக்கு கருணாநிதி கேட்டாரே.. இப்போது "கருணாநிதி மடமாக" திமுக மாறிவிட்டதே.. அதனால்தான் அந்த கட்சியில் இருந்து ஏராளமானோர் வெளியேறி பாஜகவில் இணைந்து வருகிறார்கள்" என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை என்று ஒருகாலத்தில் சொன்னவர் மறைந்த கலைஞர் கருணாநிதி... அரசியல் கட்சிகளில் வாரிசுகள் பதவிக்கு வருவதை விமர்சித்து கருணாநிதி அவ்வாறு கருத்து கூறியிருந்தார்.
ஆனால் நிலைமையும், நாட்டு நடப்பும் அப்படி இல்லை.. நேருவுக்கு பின் இந்திரா, இந்திராவுக்குபின் ராஜீவ், ராஜீவுக்குப் பின் சோனியா, சோனியாவுக்குபின் ராகுல் என்றாகிவிட்டது.. அதுபோலவே, கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என்று பதவிகளை பிடித்து வருகின்றனர்.
இப்படி கேட்ட, அதே கருணாநிதிதான், "எனக்கு பின் வழிநடத்தப் போகிற தம்பி ஸ்டாலின் அவர்களே" என்று மக்கள் முன்னிலையில் வார்த்தைகளை உதிர்த்தார். ஆரம்பத்தில் அவ்வளவாக விமர்சிக்கப்படாத நிலையில், தற்போது உதயநிதி வருகை திமுகவுக்கு வந்தபிறகு அதிகமாகவே வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.. அதேபோல, சமீப காலமாக, அதிமுகவும் இந்த வாரிசு அரசியலில் சளைத்தவர்கள் இல்லை என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா, திமுகவை விமர்சித்துள்ளார்.. மதுரை காளையார்கோயிலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், ஏராளமான திமுகவினர் அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்..
அப்போது பேசிய எச்.ராஜா, "கருணாநிதி, அவரை தொடர்ந்து ஸ்டாலின், அவரையடுத்து உதயநிதி என திமுகவில் ஒரு குடும்பத்தின் அடிமையாக இருக்க விரும்பவில்லை என அக்கட்சியிலிருந்து வந்தவர்களே சொல்கிறார்கள். திமுக என்ன சங்கரமடமா என்று திமுக தலைவராக இருந்த கருணாநிதி கேள்வி எழுப்பினார்... இப்போது கருணாநிதி மடமாக திமுக மாறியுள்ளதால் கட்சியினர் வெளியேறுகின்றனர்.
அதிமுக மட்டும் இல்லை.. திமுக கூடவும் நாங்க கூட்டணி வச்சுப்போம்.. பொன். ராதாகிருஷ்ணன் ஷாக் பேட்டி!
பிரதமர் மோடி தலைமையின் ஈர்ப்பாலும் பாஜகவில் இணைகின்றனர்... சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. திமுகவில் பலரும் அதிருப்தியில் உள்ளனர்... திமுக மூழ்கும் கப்பலாக உள்ளது... வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றார் எச்.ராஜா.. இந்த பேச்சை பாஜகவினர் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.