"ஆகவே.. மக்களுக்கு புரிஞ்சு போச்சு.. இனி அந்நியர்களை வெளியேற்றுங்க".. எச். ராஜா பொளேர் போடு!
சிஏஏ - என்ஆர்சி குறித்து எச்.ராஜா அதிரடி ட்வீட்கள் பதிவிட்டுள்ளார்
சென்னை: "சிஏஏ சட்டத்தினால் எந்த இந்திய குடிமகனின் குடியுரிமையையும் பறிக்கவில்லை என எல்லாருமே புரிந்து கொண்டுவிட்டனர் என்றும் என்ஆர்சி விவகாரத்தில் தமிழக அரசு ஆங்காங்கு உள்ள அந்நியர்களை வெளியேற்ற அடிப்படையில் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்றும் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தில் அதிகமாக ஆதரவு தந்து பேசியது பாஜக தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜாதான்.
எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் இந்த சட்டங்களை விளக்கி, புரிய வைத்து, விலாவரியாக பேட்டி தருவார். சில நேரங்களில் இது பற்றி பேசி வீடியோவும் வெளியிடுவார்.
"வார்ம் அப்"
"நாட்டில் ஊடுருவல்காரர்களை கண்டெடுத்து களைவதற்காகவே சிஏஏ சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது... இச்சட்டத்தை எதிர்ப்பது தேச துரோகம்.. சென்னை, தேனி, தாராபுரம் போன்ற இடங்களில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை நடந்திருக்கிறது.. இது பெரிய கலவரத்தை ஏற்படுத்த போராட்டகாரர்கள் தங்களை "வார்ம் அப்" செய்து கொள்கிறார்கள்.. தேசிய மக்கள் கணக்கெடுப்பின் போது மக்களின் சுய விபரங்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இந்த விபரங்களை தருவதற்கு யாரும் தயங்க தேவையில்லை" இதுதான் எச்.ராஜா அடிக்கடி சொல்லும் நிலைப்பாடு!
2 ட்வீட்கள்
ஆனால் இதில் லேசாக ஒரு மாற்றம் தெரிவதுபோல தற்போது தோன்றுகிறது.. 2 ட்வீட்களை இன்று பதிவிட்டுள்ளார் எச்.ராஜா... முதலாவதாக, "பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள அந்நியர்களை வெளியேற்ற NRC க்கு அவசியமில்லை. அந்நியர்கள் சட்டம் ( Foreigners Act) மற்றும் பாஸ்போர்ட் சட்டம் போதுமானது. எனவே தமிழக அரசு ஆங்காங்கு உள்ள அந்நியர்களை வெளியேற்ற அடிப்படையில் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சிஏஏ சட்டம்
மற்றொன்று "சிஏஏ சட்டம் எந்த இந்திய குடிமகனின் குடியுரிமையையும் பறிக்கவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு விட்டனர். பாக்கிஸ்தான் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு குடியுரிமை கேட்டு போராடுவது தேசவிரோத செயலே" என்றும் பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்து இரண்டு ட்வீட்களை போட்டுள்ளார் மூத்த தலைவர் எச்.ராஜா!
|
என்ஆர்சி
என்ஆர்சி -க்கு அவசியமில்லை என்றால் எதற்காக கொண்டு வந்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.. "சிஏஏவுக்கு ஆதரவான போராட்டம் பிசுபிசுத்து விட்டதா? அல்லது இந்த சட்டம் பற்றின சரியான புரிதல் இருந்தும் இஸ்லாமியர்களை உசுப்பிவிட்டு அரசியல் லாபம் தேடுகிறார்களா" என்று சாமான்யனின் சந்தேகங்களுக்கும் நம்மிடம் பதில் இல்லைதான்!
|
ஏன் ஆபீசர்?
எச்.ராஜா பதிவிட்ட இந்த ட்வீட்களுக்கு கீழே பல கமெண்ட்கள் வந்து கொண்டே இருக்கின்றன.. அதில், "உங்கள் வாதப்படியே பார்த்தாலும், பாகிஸ்தான் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஒரே பார்வை பார்க்காமல் அதில் முஸ்லிம்களை மட்டும் ஒதுக்குவது ஏன் ஆபீசர்?" என்று ஒருவர் பதிவு போட்டுள்ளார்.. இன்னொருவரோ, "அப்பாடா இனிமேல் ராஜா சார் CAA , NRC குறித்து எதுவும் tweet போட மாட்டார்" என்று பெருமூச்சு விட்டுள்ளார். மொத்தத்தில் வழக்கம்போல எச்.ராஜா ட்விட்டர் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது.