"எல்லாருக்கும் தேர்தல் ஜூரம் என்றால்.. காங்கிரசுக்கு மட்டும் ஜன்னியே வந்துடுச்சு.. பொன்.ராதா பொளேர்
திருமாவளவன் கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் நாத்திகத்திற்கு இடமில்லை.. இதை புரிந்து கொண்டதால் தான் பேரறிஞர் அண்ணா கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என கூறினார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.. பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியபோது, திருமாவளவன் விவகாரம் வரை தமிழக சட்டசபை தேர்தல் வரை விரிவாக பேசினார்.
தமிழக அரசின் உரிமைகளை மத்திய அரசுக்கு அதிமுக தாரைவார்த்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பொன்.ராதா பேசும்போது, "தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் மோடி அரசு ஒருபோதும் செயல்படாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லா கட்சிகளுக்கும் ஜுரம் வந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஜன்னியே வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நாத்திகத்திற்கு இடமில்லை எனவும் நாத்திகத்தை பரப்பினால் தோற்றுப் போவார்கள் என்பதால் அண்ணா கூட ஒன்றே குலம் ஒருவனே தேவன் என கூறினார் என்றும், அதனால் அவர் ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டதாக மக்கள் கருதுவதாகவும் குறிப்பிட்ட அவர், விலைபோகாத பொருளை விற்க முடியாது என்பதால் அண்ணா கூட ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனக் குறிப்பிட்டதாகவும் கூறினார்.
திருமாவுக்கு எதிராக திரள தயாரான குஷ்பு, சசிகலா புஷ்பா.. போலீஸ் திடீர் தடை.. சிதம்பரத்தில் பரபரப்பு!
நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் போன்றோர் அரசியல் வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, யார் வேண்டுமானாலும் அரசியலில் வரலாம் எனவும் அரசியலில் வருவதால் அவர்கள் பலன் பெறுவார்கள் அல்லது பாதிக்கப்படுவார்கள்.. அவர்களின் வருகை தமிழக மக்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே தன் கருத்து என்று பதிலளித்தார்.
திருமாவளவன் கூறிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய பொன்.ராதா, அது மண்ணின் பாரம்பரியம் சார்ந்த விவகாரம் என்றார். மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் உடனடியாக வந்தாலும் அது பெரிய வெற்றியை ஈட்டும் வகையில் பாஜக பலம் பெற்றிருப்பதாகவும் உறுதி கூறினார்.