மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்- அதிமுக மீது பாஜக அட்டாக் - பகிரங்க சவால்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதை தவிர்க்கவே மேயர் பதவிகளுக்கு மறைமுகமான தேர்தலை அதிமுக அரசு நடத்துகிறது என பாஜக கடுமையாக சாடியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை டிசம்பர் 2-வது வாரத்துக்குள் வெளியிட இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதனால் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேயர் பதவிக்கான நேரடி தேர்தலை ரத்து செய்யவும் மறைமுகமாக தேர்வு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கூட்டணிக் கட்சிகள் மேயர் உள்ளிட்ட பதவிகளைக் கேட்பதைத் தவிர்க்கவே அ.தி.மு.க அரசு இந்த முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா இருந்தே போதே எழுந்த சர்ச்சை.. அதிமுகவும் அஜித் குமாரும்.. அரசியலுக்கு வருவாரா தல?
இது ஜனநாயக சீர்கேடாகும். அதிமுகவுக்கு நேரடித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தைரியம் இருந்தால் ஏற்கெனவே இருந்தமுறையில் நேரடித் தேர்தல் முறையில் தேர்தலை தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும் . இவ்வாறு எஸ்.ஆர். சேகர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் பாஜக, மேயர் பதவிகளை கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதிமுக மீது பாஜக கடுமையாக விமர்சனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.