அண்ணாமலைக்கு அரசியலும் தெரியவில்லை.. வரலாறும் தெரியவில்லை.. அமைச்சர் பொன்முடி தடாலடி!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியலும் தெரியவில்லை, வரலாறும் தெரியவில்லை என்று அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
இந்து மதம் பற்றி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு பாஜக, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு திமுக அமைச்சர்கள் ஆதரவளிக்கவில்லை என்று பாஜகவினர் பேசிய நிலையில், அமைச்சர் பொன்முடி ஆதரவளித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வடக்கு பகுதி சார்பில் திமுக முப்பெரும் விழா 2022, சுயமான சுடர் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பதிலடி கொடுக்க எங்களுக்கும் தெரியும்.. அரை மணி நேரம் போதும்.. அண்ணாமலை
அண்ணாமலை மீது விமர்சனம்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை சென்றார் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்தது. இதனை துக்ளக் ஆசிரியர் கூட ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை. அப்படிப்பட்டவரை தலைவராக நியமித்து நமது உயிரை வாங்குகின்றனர் என்று விமர்சித்தார்.
ஆ.ராசாவுக்கு பொன்முடி ஆதரவு
தொடர்ந்து ஆ.ராசாவின் இந்து மதம் குறித்து பேச்சுக்கு ஆதரவளித்து அமைச்சர் பொன்முடி பேசினார். அதில், கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிவினைகள், தீண்டாமை உள்ளிட்ட செயல்கள் செய்யக் கூடாது என்பதைதான் பெரியார் வலியுறுத்தினார். ஆண்களும், பெண்களும் சமம். அனைத்து சாதி மக்களும் சமம். பெரியார் அன்று சொன்னதை தான் ஆ.ராசா பேசினார்.
ஆ.ராசா வரலாற்றைத் தான் சொல்கிறார்
ஒரு காலத்தில் கோயில் இருக்கும் தெருக்களிலும், உயர்ந்த சாதி மக்கள் இருக்கும் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நடந்து கூட செல்ல முடியாது. இதனை மாற்றியமைத்தது தான் திராவிட மாடல் என்று வரலாற்றைத் தான் ஆ.ராசா சொன்னார். யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்று ஆ.ராசா பேசவில்லை.
திராவிட மாடல்
திமுகவினருக்கு அனைத்து மதங்களும் சமம் தான். ஆனால் மதம், கடவுளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கக் கூடாது என்பதற்காக பெரியார், கடவுள் இல்லை என்று கூறினார். அப்போதுதான் ஏன் கூறுகிறார் என்று மக்கள் திரும்பி பார்ப்பார்கள் என்று கூறினார். அதன் விளைவு தான் தமிழகத்தில் சமூகநீதி, சமத்துவம் வளர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.