'அனைத்து சாதியினர் & பெண்கள் அர்ச்சகராகலாம்.. அறிவிப்பை வரவேற்கிறோம்.. ஆனால்..' எல் முருகன் பளீச்
சென்னை: அனைத்து சாதியினரும் பெண்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன், இருப்பினும், பண்டைக் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் இது நடைமுறையில் உள்ள ஒன்று தான் என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இன்னும் 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் எனக் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.
அதேபோல, அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும் பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்குத் தனிப் பயிற்சி கொடுக்கப்படும் என்றும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
எல் முருகன் வரவேற்பு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பைப் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்பதாகத் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப் பரிசீலிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
பண்டை தமிழ் கலாசாரம்
அதேநேரம் கடந்த காலங்களில் நமது பண்டை தமிழ் காலசாரத்தில் அனைத்து சாதியினரும் (பெண்கள் உட்பட) நமது கோவில்களில் அர்ச்சகர்களாக இருந்துள்ளனர் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். அதன்படி பல்வேறு சாதியினரும் அர்ச்சகர்களாக இருக்கும் சில கோயில்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
பெண்கள் அர்ச்சகர்கள்
மேலும் அவர் தனது அறிக்கையில், "அண்மையில், தமிழ்நாடு அரசு பெண்களையும் அர்ச்சகர்களாக நியமிப்பது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியிருந்தது. பண்டைய நாட்களிலிருந்தே, அகம விதிகளைப் பின்பற்றி பெண்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் பூஜை செய்து வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் ஏற்கனவே அனைத்து சாதியினரும், ஆண்களும் பெண்களும் கோவில்களில் அர்ச்சகர்களாகவே உள்ளனர்.
அகம விதிகள்
தமிழ்நாடு அரசின் தற்போதைய முயற்சியை வரவேற்கும் அதே வேளையில், அர்ச்சகர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு அந்தந்த கோவில்களில் பின்பற்றப்படும் அகம விதிகள் குறித்துச் சரியான அறிவும் புரிந்துணர்வும் இருப்பதை உறுதி செய்யுமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.