"காந்தியும் இதையேதான் சொன்னார்.. நானும் அதையேதான் சொன்னேன்".. எஸ்.வி.சேகர் அதிரடி வாதம்!
விசாரணைக்காக கமிஷனர் ஆபீசில் ஆஜரானார் எஸ்வி சேகர்
சென்னை: காந்தி என்ன சொன்னாரோ, அதைதான் எஸ்வி சேகர் சொன்னதாக, அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை கமிஷனர் ஆபிசில் விசாரணைக்காக எஸ்வி சேகர் ஆஜராகி உள்ளார். தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இப்போது விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டியில், தெரிவித்தபோது, "தலைவர்களின் சிலைகளை இப்படி களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூறியிருந்தார்.
உடனே எஸ்வி சேகர் ஒரு வீடியோ போட்டு, "தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும்.. காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், அந்த களங்கமான தேசிய கொடியைத் தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றப்போகிறாரா?" என்று கேட்டிருந்தார்.
எஸ்வி சேகரின் இந்த சர்ச்சை பேச்சு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அமைச்சர் ஜெயக்குமாரும் எஸ்வி சேகரை எச்சரித்திருந்தார்... மேலும் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் எஸ்வி சேகர் மீது சென்னை கமிஷனர் ஆபீசில் இதுகுறித்து புகாரும் தந்தார்.
இதையடுத்து, தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்விசேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் பிரிவு 2 ன் கீழ் எஸ்வி சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், எஸ்வி சேகர் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, நேற்று முன்தினம், தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டை அணுகினார் எஸ்வி சேகர்.. இந்த வழக்கில் எப்படியும் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என கருதி, முன் ஜாமீன் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது,
அப்போது, "இந்து - முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலேயே தேசிய கொடியில் காவி மற்றும் பச்சை நிறம் இடம்பெற்றுள்ளதாக காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே தான் தெரிவித்ததாக எஸ்.வி.சேகர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த போலீஸ், தரப்பு, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு முன்னர் காந்தியடிகள் இந்த கருத்தை தெரிவித்ததாகவும், அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர், தேசிய கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் எஸ்வி சேகர் தற்போது கருத்து தெரிவித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தேசிய கொடியை அவமதித்ததால் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்ப்பிரிவின் கீழ் எஸ்வி சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்த காவல்துறை, இன்று காலை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவில் எஸ்விசேகர் ஆஜராகியுள்ளதாகவும், இன்று நடத்தப்பட்ட விசாரணை நிறைவடையாததால் அவர் மீண்டும் வரும் 28 ஆம் தேதி ஆஜராக எஸ்வி சேகருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Suicide: "அந்த" எண்ணம் வருதா.. தைரியமா இருங்க.. ஹேப்பியா மீண்டு வரலாம்!
விசாரணையின் போது எஸ்.வி.சேகர் கொடுக்கும் விளக்கத்தை பொருத்தே அவரை கைது செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் எனவும், இடையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.