கனிமொழி போட்ட "ஹிந்தி வெடிகுண்டு".. விடுமா பாஜக.. "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை" பதில் முழக்கம்
கனிமொழிக்கு பாஜகவின் எஸ்வி சேகர் பதிலடி தந்துள்ளார்
சென்னை: கனிமொழி போட்ட ஒரே ஒரு "ஹிந்தி வெடிகுண்டு".. இன்று நாலாபுறமும் தெறித்து கொண்டு வெடித்து வருகிறது.. "சூப்பர் அக்கா", சூப்பர் மேடம் என்று உடன்பிறப்புகள் உச்சி முகர தொடங்கிவிட்டனர்... மற்றொரு பக்கம் "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை" என்று பாஜக தரப்பு சொல்ல ஆரம்பித்துவிட்டது.
எம்பி கனிமொழி ஏர்போர்ட்டில் தன்னிடம் பேசிய சிஐஎஸ்எப் பாதுகாவலரிடம், ஆங்கிலத்தில் பேசுங்கள், இந்தி எனக்குப் புரியாது என்று கூறியபோது, நீங்க இந்தியரா என்று சிஐஎஸ்எப் அதிகாரி கேட்டதாக கூறி, அது தொடர்பாக ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார். "எப்போதிருந்து இந்தி அறிந்து கொள்வது இந்தியராக இருப்பதற்கு சமமானது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கேட்டிருந்தார்.
இந்த ஒரு ட்வீட்தான் சுடசுட வைரலானது.. பரபரப்பை கிளப்பியது.. இதையடுத்து அவருடைய பயண விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.. அத்துடன், எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப் கொள்கை அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவு
இந்தி திணிப்பு
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கனிமொழி பதிவிட்ட அந்த ட்வீட் வேறு மாதிரியான அரசியல் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.. திமுகவை பொறுத்தவரை இந்தி திணிப்புக்கு எதிராக பேசி வளர்ந்த கட்சியாகும்.. எந்த காலத்திலும் ஹிந்தி மொழிக்கு ஆதரவான கருத்தை வலியுறுத்தியதே இல்லை.. ஒவ்வொருமுறையும் டெல்லியில் இருந்து இந்தி மொழிக்கு ஆதரவாக எந்த அறிவிப்பு வந்தாலும் அதற்கு முதலில் பலமான எதிர்ப்பு காட்டுவது திமுகதான்.
மும்மொழி கொள்கை
சமீபத்தில்கூட, மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்து வருகிறது.... இந்த மும்மொழி கொள்கை என்பது இந்தியை திணிப்பதற்காகத்தான் என்று குரலை உரக்க எழுப்பியது திமுகதான்.. இப்போது கனிமொழி விவகாரத்திலும் அதுதான் வெளிப்பட்டுள்ளது.. தன்னுடைய பயண அனுபவத்தின் ஆதங்கத்தை கனிமொழி வெளிப்படுத்தியதில் இருந்து, திமுக தன் நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாக உள்ளதாகவே கருதப்படுகிறது.
எதிர்ப்பு
இன்னொரு பக்கம், இதே விவகாரத்தை பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேறு மாதிரியாக திசை திருப்பி கொண்டிருக்கின்றன.. திமுகவின் மும்மொழி கொள்கை குறித்த எதிர்ப்புகள் யாவும் மக்களிடம் அவ்வளவாக போய் சென்றடையவில்லை.. கனிமொழி இப்படி ட்வீட் போட்டதே மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகவேதான் என்று சொல்லப்பட்டு வருகின்றன,
அதிகாரிகள்
அதுமட்டுமில்லை.. எம்பிக்களிடம் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் இதுபோல நடந்து கொள்வதற்கும், கேள்வி கேட்பதற்கும் விதிகள் எதுவுமே இல்லாதபோது, நீங்க இந்தியரா என்று யாரும் கேட்டிருக்க முடியாது என்று ஏர்போர்ட் வட்டாரம் சொல்கிறது. மேலும், வரப்போகும் தேர்தலுக்காக இந்த விஷயத்தை ஆதாயமாக்க திமுக முயற்சி செய்கிறது என்று மேலும் சில தரப்பினர் சொல்கிறார்கள்.
எஸ்வி சேகர்
அதேபோல, எஸ்வி சேகர் இதை பற்றி சொல்லும்போது, மும்மொழி கல்விக்கு எதிராக பேசி வரும் திமுகவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தேவையில்லாமல் இதுபோல கருத்துக்களை கனிமொழி மூலம் திமுக தலைமை முன்னெடுத்துள்ளது.. இதற்காகத்தான் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
உருது மொழி
மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டால், வருங்கால சிஐஎஸ்எப் அதிகாரிகள் தமிழ் பயில உதவும்.. தமிழக ஆரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது பயில உதவுவதுபோல, அரசு பள்ளி மாணவர்கள் இந்தி பயிலவும் வாய்ப்பளிக்க வேண்டும்.. இந்தி இல்லாமல் "இந்தியா" என்ற வார்த்தையையே உச்சரிக்க முடியாது என்று பதிலளித்துள்ளார். அதாவது அவர் இந்தியா என்பதையே ஹிந்தியா என்பது போல மாற்றி விட்டார்.. அதாவது நாட்டின் பெயரையே மாற்றி விட்டார் எஸ்.வி.சேகர்.
நெகிழ்ச்சி
ஆக, கனிமொழி கிளப்பிய இந்த விவகாரம் பலவாறாக வெடித்து வருகிறது.. கொள்கை பிடிப்பு அதில் உறுதியாக தென்படுகிறது.. இப்படி ஒரு ட்விட்டை போட்டு, தன் தரத்தை நியாயத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்ததால், கனிமொழியின் அதிரடியை கண்டு உடன்பிறப்புகள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.