தமிழகத்திலும் "அந்த மாதிரி"தான்-பாஜகவின் சிடி ரவி ஒப்புதல் வாக்குமூலம்- அதிர்ச்சியில் அதிமுக, திமுக
சென்னை: வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடகா, கோவாவை போல தமிழகத்திலும் எப்படியும் 2021-ல் ஆட்சி அமைப்போம் என அண்மையில் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி பேசியிருப்பது அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதாக உறுதியாக சொல்கின்றனர். தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி; நாங்கள் சின்ன கட்சிதான் என்றும் சொல்கிறது பாஜக.
ஆனால் அதிமுகவிடம் பாஜக நடந்து கொள்ளும்விதம்தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அதிமுகவிடம் 60 தொகுதிகள் கேட்டதாகட்டும்; அல்லது பாமக, தேமுதிக, புதிய தமிழகம், பாஜகவுக்கு என மொத்தமாக 100 தொகுதிகளை தனியே பீகார் பார்முலாபடி ஒதுக்கிவிடுங்கள் என நிர்பந்திப்பதிப்பதாகட்டும், பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தன.
சிடி ரவி ஷாக் பேச்சு
இதனிடையே சேலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பாஜக மேலிடப் பொறுப்பாளரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிடி ரவி ஒரு கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதில், வடகிழக்கு மாநிலங்கள், கோவா, கர்நாடகா போல தமிழகத்தில் 2021-ல் ஆட்சி அமைப்போம் என சிடி ரவி கூறியிருந்தார். சிடி ரவி சொல்லும் வடகிழக்கு மாநிலங்கள், கோவா, கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்த விதம் பெரும் சர்ச்சைக்குரியது மட்டுமல்ல.. குறுக்குவழியில்தான் ஆட்சியையே பிடித்தது.
கோவாவில் ஆட்சியை பிடித்தது எப்படி?
வடகிழக்கு மாநிலங்களில் மாநில கட்சிகளை வளைத்து, காங்கிரஸை சின்னா பின்னமாக்கி அந்த தலைவர்களை பாஜக முகமாக்கி என எத்தனை கோல்மால் வேலைகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்தது பாஜக. கோவாவை பொறுத்தவரையில் 2017 தேர்தலில் தனிப்பெரும்பான்மை கட்சியாக காங்கிரஸ் வென்றது. ஆனால் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் உதவியுடன் அதிகாரத்தில் அமர்ந்தது. அதன்பின்னர் சாவகாசமாக காங்கிரஸ் கட்சியின் 17 எம்.எல்.ஏக்களில் 10 பேரை கூண்டோடு வளைத்து பாஜகவாக்கிக் கொண்டது. இதனால் ஆட்சிக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொண்டது.
கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு
கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி ஆட்சியை கவிழ்த்தது. பின்னர் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. இப்படி இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைப்பது அல்லது எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு, ஆட்சி மாற்றங்களை செய்வதை புதிய யுக்தியாக பாஜக கையில் எடுத்திருக்கிறது. இதேபாணியைத்தான் தமிழகத்திலும் அமல்படுத்துவோம் என மறைமுகமாக சொல்லி இருக்கிறார் சிடி ரவி.
தமிழகத்தில் என்ன திட்டம்?
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக என எந்த கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் இரு கட்சிகளில் இருந்தும் கணிசமான எம்.எல்.ஏக்களை வளைத்து அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றத்தான் பாஜக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறதா? என்கிற கேள்வியை சிடி ரவியின் பேட்டி சுட்டிக்காட்டுகிறது. சிடி ரவியின் பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்துக்குரியதாகவும் இதுவரை மாறாமல் கமுக்கமாக இருப்பதும் திமுக, அதிமுக கட்சிகளை அதிர்ச்சியடையவும் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.