சேர்ந்ததே தப்புன்னு நினைக்கும்போது.. பிரச்சாரத்திற்கு மட்டும் எப்படி வருவார் நெப்போலியன்
நடிகர் நெப்போலியனை பிரச்சாரத்துக்கு அழைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
Recommended Video
சென்னை: விஷயம் தெரியுமா.. நம்ம நெப்போலியனை பிரச்சாரத்திற்கு அழைத்து அது முடியாமல் போனதால் கவலையில் இருக்கிறதாம் பாஜக.
திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் வீட்டு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தவர் குமரேசன். இவர்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தில் நெப்போலியன் என்ற பெயரில் வில்லனாக நடித்தார்.
பிறகு கதாநாயகன் உள்ளிட்ட ஸ்டார் கேட்டரிக்கு உயர்ந்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே அரசியலிலும் கால்பதித்தார்.
பெரம்பலூர்
திமுகவின் இளைஞர் அணி பொறுப்பு, வில்லிவாக்கம் எம்எல்ஏ, 2009-ல் பெரம்பலூர் எம்பி என கிடுகிடுவென உயர்ந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் மத்திய இணை அமைச்சராகவும் அங்கம் வகித்தார். பிறகு திடீரென கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு, காரணமாக திமுகவிலிருந்து விலகினார் நெப்போலியன்.
அமித்ஷா
இதனையடுத்து 2014-ல் மிஸ்டு கால் ஆப்ஷன் மூலம் அமித்ஷா முன்னிலையில் சென்னை கமலாலயத்ல் பாஜகவில் இணைந்தார். இதைக்கண்டு அதிர்ந்தது திமுக வட்டாரம். சிறிது நாளிலேயே பாஜகவின் மாநில துணை செயலாளர் பதவியும் நெப்போலியனுக்கு மேலிடம் தந்து அழகு பார்த்தது.
அழைப்பு
ஆனால் அதோடு சரி.. அன்னைக்கு போன நெப்போலியன் திரும்பவும் கட்சி பக்கம் வரவேயில்லை. மாநில துணை செயலாளர் பொறுப்பிலும் இருந்து கொண்டு, கட்சி பணியிலும் ஈடுபடாமலே உள்ளதால் அதிருப்தியில் உள்ளதாம் கட்சி. மற்ற நேரங்களில் இல்லாவிட்டாலும் இப்போது தேர்தல் சமயம் என்பதால் பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாம்.
நோ சொன்ன நெப்ஸ்
ஸ்டார் வேட்பாளர், மிக மிக முக்கிய பொறுப்புகளை வகித்த நெப்போலியன் இந்த நேரத்தில் இணைந்து செயல்பட்டால் கட்சிக்கு பலமாக இருக்கும் என்று நினைக்கிறதாம். இதற்காக போனிலும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டதாம்.. ஆனால் நெப்போலியன் சாரி சொல்லி விட்டாராம்.
அமெரிக்கா
உண்மையில் நெப்போலியனின் மகனுக்கு ஏற்பட்டிருக்கும் தசை சிதைவு நோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், கடந்த 3 ஆண்டுகளாக குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார் நெப்ஸ். கூடவே அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
கமலாலயம்
பாஜகவில் சேர்ந்ததே அவசர முடிவு எனக் கருதும் நெப்போலியன், பிரச்சாரத்திற்கு எப்படி வருவார் என கேள்வி எழுப்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள். மகனுக்கு சிகிச்சை உள்ளிட்ட சில சாக்குபோக்குகளை சொல்லி நைஸாக ஒதுங்கிக் கொண்டாராம் நெப்ஸ். இதனால் தாமரைக்கு வாக்குகேட்க வேறு எந்த பிரபலத்தை பிடிக்கலாம் என யோசித்து வருகிறது கமலாலயம் முகாம்.