அபர்ணாவுக்கு நூல் விடுகிறதா பாஜக.. திடீரென "ஒய்" பாதுகாப்பு வழங்கிய யோகி.. என்ன நடக்கிறது உபியில்?
முலாயம்சிங் யாதவ் மருமகள் அபர்ணா பாஜக தாவ போகிறார் என்று கூறப்படுகிறது
சென்னை: எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோலதான், முலாயம்சிங் மருமகள் அபர்ணாவின் செயல்பாடுகளை எல்லாம் பார்த்தால் தெரிகிறது.. விரைவில் பாஜக பக்கம் தாவ போகிறாரா என்பதுபோல அவரது நடவடிக்கைகள் கவனிக்க வைத்துள்ளன.. அதேபோல பாஜகவும் அபர்ணாவை இழுக்க முடிந்த முயற்சிகளை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச அரசியலை பொறுத்தவரை முலாயம் சிங் யாதவ் குடும்பத்தினர் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி உள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ், இளைய மகன் ஷிவ்பால் சிங் யாதவ் என மொத்த பேருமே அரசியல் ஆளுமைகளாக உள்ளனர்.
இவர்களை தவிர, முலாயம் சிங் சொந்தக்காரர்கள் ராம்கோபால் யாதவ்,தர்மேந்திரா யாதவ்,தேஜ் பிரதாப்சிங் யாதவ் போன்றோர் எம்பி பதவி வரை சென்றுவிட்டனர்
இந்நிலையில்தான் முலாயம் சிங்கின் இளைய மருமகள், அபர்ணா பற்றின செய்திகள் சில வருடங்களாகவே எழுந்து வருகின்றது.. ஆரம்பத்தில் இவர் ஒரு சமூக ஆர்வலராகத்தான் இருந்தார்.. மூத்த பத்திரிகையாளர் அரவிந்த் சிங் பிஸ்த் மகள்தான் அபர்ணா.. அகிலேஷ் யாதவ்வின் சகோதரர் பிரதீக் யாதவின் மனைவி.. கடந்த 2017-ம் ஆண்டில் உபியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் லக்னா தொகுதியில் போட்டியிடுவார் என்ற அறிவிப்பில் இருந்து அரசியல் பிரவேசம் வேகம் எடுத்தது.
இப்போது பரபரப்பு என்னவென்றால், கொஞ்ச நாளாகவே பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறாராம்.. ஏன் என்று தெரியவில்லை.. இவர் பசு பராமரிப்பு மையம் ஒன்றினை நடத்தி வருகிறார்.. அதனால் இவர் பேசும்போதே பாஜக வாடை அதிகமாகவே வருகிறதாம்..
கடுமையாக முயற்சித்தும் 2017 சட்ட மன்றத் தேர்தலில் சமாஜ்வாதியில் போட்டியிட்டு இவருக்கு தோல்விதான் கிடைத்தது.. அதிலேயே கடுப்பாக இருந்தவர், அகிலேஷ் யாதவின் அரசியலில் மேலும் கடுப்பாகி இருக்கிறாராம்.. அவரது அரசியல் நடவடிக்கை அபர்ணாவுக்கு எரிச்சலை மூட்டுவதாகவும், அதனாலேயே அகிலேஷுக்கு எதிரான செயல்களை செய்ய, முடிவு செய்துள்ளதாகவும் அம்மாநில சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இப்படி அரசல்புரசல்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தால், திடீரென அபர்ணாவுக்கு "ஒய்" பிரிவு பாதுகாப்பு வழங்க உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தடாலடியாக உத்தரவிட்டுள்ளாராம்.. அதனால் எப்படியும் அபர்ணாவை தங்கள் பக்கம் இழுத்துவிட பலமான முயற்சிகளும் பாஜக தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
அடுத்த எம்எல்ஏ தேர்தலில் அநேகமாக பாஜக சார்பாககூட போட்டியிடலாம் என்ற கணிப்புகளும் வலுவாகி வருகின்றன. ஆனால், இவ்வளவு நடந்தும், அபர்ணா அதை சுத்தமாக மறுக்கிறார்.. நான் இன்னும் சமாஜ்வாதி கட்சி அடிப்படை உறுப்பினர்தான் என்கிறார்.
Recommended Video
"ஆனால், முலாயம் சிங் எதுக்காக கட்சி தொடங்கினாரோ அதுக்கு எதிராகவே சமாஜ்வாதி இப்போது செயல்பட்டு வருகிறது.. கட்சியில் பெண்களுக்கான முக்கியத்துவமும் இல்லை. கொரோனா தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன" என்று ஒரு பஞ்ச் வைத்துள்ளார். இதற்குதான் இன்னும் அர்த்தம் புரியவில்லை! உபியில் பெரிய கட்சியான சமாஜ்வாதி கட்சியை வலுவிழக்க செய்ய, எப்படியும் பாஜக அபர்ணாவை கட்சிக்குள் இழுத்துவிடும் என்றே தெரிகிறது!