முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்!
சென்னை: தமிழக முதல்வரும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தொடங்கி தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என இடைவிடாமல் பேசிவருகிறார். இதற்கு காரணமே டெல்லியில் பாஜக தரப்பில் அவருக்கு தரப்பட்ட கடும் நெருக்கடிதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
சசிகலா சிறையில் இருந்து வரும் 27-ந் தேதி விடுதலையாகிறார். அதற்குள் சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தொடர் பேச்சு
இந்த நிலையில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் 100% சேர்க்கமாட்டோம் என திட்டவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக கூறி வருகிறார். அதேபோல் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் திடீரென திராவிட மண்; பெரியார் மண்; தீமையை ஜெயலலிதா அகற்றி வைத்துவிட்டார் என பரபர ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.
எடப்பாடியின் டெல்லி பயணம்
இதற்கு எதிராக அமமுகவினரோ, அதிமுகவுடன் மீண்டும் இணைவது உறுதி; இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம் என்கிற அளவில் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லி வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, முதல்வர் எடப்பாடி பழனிசாயின் இந்த முறை டெல்லி பயணம் அப்படி ஒன்றும் அவருக்கு சாதகமாக இருந்துவிடவில்லை.
சசிகலாவுக்காக வெயிட்டிங்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதும் பிரதமர் மோடியை சந்தித்த போதும் சசிகலாவை சேர்க்க கூடாது என்கிற கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்திருக்கிறார். ஆனால் இதனை இருவருமே விரும்பாமல் கண்டுகொள்ளாமலேயே பொறுங்க பார்த்து கொள்ளலாம் என்கிற ஒற்றை கருத்தை திரும்ப திரும்ப சொல்லி இருக்கின்றனர். அதாவது சசிகலா சிறையில் இருந்து வரட்டும்; அதிமுக தலைவர்கள் மற்றும் மக்கள் என்ன மாதிரி ரியாக்சன் கொடுக்கிறார்கள் என பார்த்துவிட்டு அடுத்த கட்டமாக முடிவெடுக்கலாம் என்பது டெல்லி பாஜகவின் நிலைப்பாடு.
அதிருப்தியில் டெல்லி
அதனால் முதல்வர் வேட்பாளர், தொகுதி பங்கீட்டில் கறார் காட்டுவது போன்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் அத்தனை மூவ்களையும் ரசிக்கவில்லையாம் டெல்லி பாஜக. அவர்களைப் பொறுத்தவரை சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாம் என்கிற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டே இடைவிடாமல் சசிகலாவுக்கு எதிரான கருத்தை அதிமுக தொண்டர்களிடம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது டெல்லியில் கூடுதல் அதிருப்தியைத்தான் உருவாக்கி இருக்கிறது என்கின்றனர்.