அதை பத்தி இப்ப எதுக்கு.. அப்புறம் பார்த்துக்கலாம், நேரமாச்சு.. புன்னகையுடன் கிளம்பிய வானதி சீனிவாசன்
வேல் யாத்திரை குறித்து வானதி சீனிவாசன் கருத்து கூறியுள்ளா
சென்னை: காமராஜர் வழியில் ஆட்சியை நடத்தவே பாஜக விரும்புகிறது என்று வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.. விஜய் அரசியல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அதெல்லாம் அப்பறமா பேசலாம் என்று கருத்து கூற மறுத்துவிட்டார்.
சென்னை விமான நிலையத்தில் தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் கூறியதாவது:
"தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் தமிழகம் முழுவதும் வெற்றி வேல் யாத்திரை மூலமாக அரசின்திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லக்கூடிய வகையில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.. இது துரதிர்ஷ்டவசமானது.
யாத்திரை
யாத்திரை சென்ற மாநில தலைவர் உள்பட நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. தொற்றில் எப்படி பாதுகாப்பாக வாழ்வது என்று மக்கள், வாழ ஆரம்பித்துள்ள இந்த சூழலில், அரசியல் கட்சியான நாங்களும் மக்களை எப்படி சந்திப்பது, கருத்துகளை எடுத்து சொல்வது எப்படி என்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் யாத்திரை செய்யப்பட்டது.
முருகன்
இப்போது யாத்திரையை நாளை பாஜக தலைவர் மறுபடியும் தொடர இருக்கிறார்... இந்த யாத்திரைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.. தொற்றிலிருந்து பாதுகாப்புடன் செல்ல எந்தவொரு கட்டுபாட்டு விதிமுறைகளை விதித்தாலும் இந்த யாத்திரை தொடர முதல்வர் அனுமதி தர வேண்டும்" என்றார்.
எம்ஜிஆர்
இதையடுத்து யாத்திரை பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படம் பயன்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு வானதி, "எம்ஜிஆர் பெண்கள் மத்தியில் பிரபலமானவர்... பெண்கள் மீது கருணை, பாசம் அவருக்கு இருந்தது.. அதுபோல் தான் பிரதமர் மோடி தமிழகத்தின் பெண்களுக்கு பாதுகாவலர்.. அரசின் திட்டங்கள் வாயிலாக பாதுகாவலாக இருக்கிறார். அதை சொல்ல தான் பாஜக கலைப்பிரிவு எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி இருப்பார்கள்.
மோடி
எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவதில் தவறும் இல்லை... காமராஜர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.. ஆனால் இன்றும் அவருக்கு நாங்கள் மரியாதை தருகிறோம்.. காமராஜர் வழியில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற கருத்தை பாஜக பல்வேறு இடங்களில் சொல்லி வருகிறது... நேர்மையான எளிமையான வெளிப்படையான நிர்வாகம் செய்த காமராஜரை உதாரணமாக சொல்லுகிறோம்.. நல்ல தலைவர்களை எடுத்து கொண்டாடுவதில் தவறு கிடையாது" என்றார்.
நன்றி
விஜய் தந்தை கட்சி ஆரம்பித்துள்ள விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதெல்லாம் அப்பறம் பேசலாமே.. ஃபிளைட்டுக்கு நேரமாச்சு.. வேல் யாத்திரை பற்றி மட்டும்தான் உங்ககிட்ட கருத்து சொல்லணும்னு நினைச்சேன்.. நன்றி" என்றார்.